Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, July 30, 2013

அன்னையின் சக்தி செயல்பட, அறியாமையால் நாமே ஏற்படுத்தும் தடைகளும், அதனை நம்மிடமிருந்து அகற்றுவதன் முக்கியத்துவமும்

- திரு கர்மயோகி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இருந்து..


அன்னையை அழைத்தவுடன், அவர் மின்னல் போல் செயல்படும்பொழுது நம் மனம் குறுக்கே நிற்காது, எந்தச் சந்தர்ப்பமும் நம்மை நினைக்காததால் அன்னைக்குத் தடையாக இருக்காது. அதனால் விஷயம் கூடிவரும். நாம் நாடிச் செல்லும் விஷயங்களை மனம் இதுபோல் மறந்திருக்காது. மற்ற சந்தர்ப்பங்கள் தடை ஏற்படுத்த முனைந்திருக்கும். அதனால்தான் அன்னையின் சக்திக்குத் தடை ஏற்படுகிறது.

நீண்ட காலமாக உள்ளூரிலேயே உத்தியோகம் செய்து வந்த ஒருவர், பதவி உயர்வை எதிர்பார்த்தார். நியாயமான எதிர்பார்ப்புத்தான். அவருடைய பதவி உயர்வுக்கு அலுவலகத்தில் யாரும் முட்டுக்கட்டை போடவில்லை. என்றாலும் ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்ன என்று கண்கூடாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர். ‘நான் அன்னையை உருக்கமாகப் பிரார்த்தித்துக்கொண்டு வருகின்றேன். பதவி உயர்வைத் தவிர மற்றவை எல்லாம் எனக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மட்டும் என்ன தடை என்று புரியவில்லை’ என்று அடிக்கடி கூறி வேதனைப்படுவார் அவர்.

“உங்களுக்கு உள்ளூரைவிட்டுப் போகப் பிரியம் இல்லை. பதவி உயர்வு கிடைத்தால் நீங்கள் வெளியூருக்குப் போக வேண்டியதிருக்கும். அதனால்தான் தடை” என்று அவருக்கு விளக்கும்பொழுது, தமக்குத் தாமே தடையாக இருந்ததை உணர்ந்து, முதல் வேலையாக உள்ளூர் ஆசையைத் துறக்கின்றார். அவருக்கு உடனே பதவி உயர்வு கிடைத்துவிடுகின்றது. மனத்தால் விரும்பும் ஒன்றை, அவர் உணர்ச்சியால் விரும்பவில்லை. ஊரைவிட்டுப் போக விரும்பாத உணர்ச்சி, பதவி உயர்வுக்குத் தடையாக இருந்தது. அதுவே அன்னையின் சக்தி செயல்படத் தடையாகவும் இருந்தது.

ஓர் அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்து பிராமிசரி நோட்டு எழுதி வாங்கினால், ‘அந்த நோட்டு அவனைக் கட்டுப்படுத்தும்’ என்று நினைப்பது தவறு. அந்தத் தவற்றை உணராத வரையில் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள், அந்தப் பணத்தைப் பெற்றுத் தாரா. ஆனால், செய்த பிரார்த்தனைகள் வீண் போகா. அவை வேறு காரியங்கள் கூடிவர உதவி செய்யும்.

சம்பந்தப்பட்டவரின் தவறான நினைவு, அந்தச் செயலின் மீது இருள் போலப் படிந்துள்ளது. பிரார்த்தனையால் நம் உள்ளே வரும் ஒளியை அது தடை செய்கின்றது. அது வெறும் இருளாக இருந்தால், அந்த ஒளியே அதைக் கரைத்துவிடும். ஆனால், அது சம்பந்தப்பட்டவருடைய அறிவின் துணையோடு ஏற்பட்ட இருள். அதனால் அன்னையின் ஒளியால்கூட அதைச் சுலபமாகக் கரைத்துவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை சம்பந்தப்பட்டவருக்குப் பொறுமை வேண்டுமே!

‘பிரார்த்தனை பலிக்கவில்லை’ என்றுகூடச் சிலர் நினைக்கின்றார்கள். அது உண்மையே. அப்படி நினைக்கின்றவர்களுடைய குறைபாடு வெளிப்படையாக எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்களுக்குத் தெரிவது இல்லை. நோய் தெரியாமல் மருந்துண்ணுவது எப்படி? அவர்கள் முதலில் தங்களின் நோய் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய குறைபாடு என்னவென்பதை நுணுகிச் சலித்து அறிய வேண்டும். அது முடியாத பட்சத்தில், நெருங்கிப் பழகுபவர்களிடம் பிரச்சினைக்குக் காரணமான நம் குறைபாடு என்ன என்பதைக் கேட்டறிந்து அந்தக் குறைபாட்டை விலக்கியபின், பிரார்த்தனை செய்வது முதல் வழி. இந்த முதல் வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, பிரச்சினையின் முழு விவரத்தையும் தினந்தோறும் ஒரு முறை அன்னையிடம் சொல்ல வேண்டும். இது இரண்டாவது வழி. முதல் வழியைப் பின்பற்றுவதன் மூலம் பிரச்சினை நாள் கடந்து தீரும். இரண்டாவது வழியின் மூலம் பிரச்சினை நிச்சயமாகத் தீரும். ஆனால், விரைவில் தீராது. ஏனென்றால் பிரார்த்தனைக்கு இரு கடமைகள் உண்டு. முதலில் பிரார்த்தனை, பிரச்சினைக்கு உரிய குறையை அகற்ற வேண்டும். பின்னர் பிரச்சினையைக் கரைக்க வேண்டும்.

ஒருவர் ஆலை முதலாளி. 10 கோடி மூலதனத்துடன் 500 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஆலை அவருடையது. வேலை பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வந்து சந்தித்தபோது அவர் எரிச்சலுடன், “இப்படி ஒவ்வொருவராக வந்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து சங்கம் அமையுங்கள். தலைவரை நியமியுங்கள். உங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து அவரை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டார். பிறகு என்ன? ஆலைக்குள் சங்கம் வந்தது; தலைவர் வந்தார். கூடவே தாங்க முடியாத அளவுக்குப் பிரச்சினைகளும் வந்தன. இத்தனையும் வந்தபிறகு வழக்கமாக வரும் கோஷம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் போன்றவையும் வந்து ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டன.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவர் அந்த ஆலை முதலாளிதான். சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் அவர்தாமே! வம்பை விலை கொடுத்து வாங்கிச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் அவர் என்னைச் சந்தித்து, “சிக்கல் தீர வழி கூறுங்கள்” என்று வேண்டினார்.

“சொல்லப் போனால் வேலை நிறுத்தத் தலைவர் நீங்கள் தான். அதாவது சிக்கலுக்குக் காரணமான சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் நீங்கள் தானே? அன்னையிடம் இந்தப் பிரச்சினைக்குத் தோற்றுவாயாக அமைந்த உங்கள் குறைபாட்டைக் கூறிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றேன் நான்.

அவர் தம் தவற்றை உணர்ந்து, தம் குறையை அன்னையிடம் சமர்ப்பித்து, நிவாரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். சில நாட்களில் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. கடைசியில் யூனியனே காணாமல் போய்விட்டது!
ஏன் பக்தர்களுக்கு தீராத பிரச்சினைகள் இருக்கின்றன? ஏன் அவர்களால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை? தீர்க்க முடியவில்லை என்பது உண்மையா? தீர்க்க முனைவதில்லை என்று பொருளா? தீர்வை விட முக்கியமானது ஒன்று அவர்களுக்குண்டா? குறிப்பிட்ட வழியில் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் தடையாக இருக்கிறதா? தடையென்று தெரிந்த விஷயத்தை விலக்க மறுப்பதால் தாமதமாகிறதா? அல்லது தங்கள் பழக்கத்தால் தடையை ஏற்படுத்துகிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. பிரச்சினைகளைத் தீர்க்கும் எல்லா திறமைகளும் இருந்தபோதிலும், அவற்றைத் தீர்க்காமல் இருக்கின்றார்கள் என்பது விநோதமாக இருக்கின்றது. பக்தர்களால் தீர்க்க முடியாதது என்பதில்லை என்பதும் உண்மை. அவர்களுக்குத் தீராத பிரச்சினைகள் உண்டு என்பதும் உண்மை.

அன்னைக்கு வேண்டிக் கொண்டால், அது புனிதமான ஆன்மிக சக்தியை நம்முள்ளும், நம் சூழலும் கொணரும். அது பலிக்கத் தூய்மையான சூழல் தேவை. இருப்பிடம் சுத்தமாகவும், உணர்வுகள் தெளிந்து தூய்மையாகவும் இருந்தால் அன்னையின் சக்தி தடையின்றி செயல்படும்.

Ph.D. படித்துக்கொண்டிருந்த மாணவர், தன் பிரச்சினை ஒன்று தீர blessing packet பிரசாதம் பெற்றுக்கொண்டார். அதனால் பலன் ஏற்படவில்லை எனக் குறைப்பட்டார். அவர் வீட்டையும், துணிமணிகளையும் சுத்தமாக வைக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அதைச் சுட்டிக்காட்டியபின் வீட்டைப் பெருக்கி, மெழுகி, துணிமணிகளைத் துவைத்த அன்றே பிரசாதம் பலன் கொடுத்தது. அழுக்குள்ள இடத்தில் அன்னையால் செயல்பட முடியாது.

மனம் எதிர்பார்க்கும் தன்மையுடையது. படபடக்கும் இயற்கையுடையது. அவை நோய் குணமாவதைத் தடுக்கும். தன் பிரார்த்தனையால் தன் நீண்டநாள் நோய் குணமடைந்து வருவதைக் கண்ட பக்தருக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. நாளை காலை நான் எழுந்தவுடன் நோய் மாயமாய் மறைந்து நான் விடுதலையடைய வேண்டும் என்று நினைக்கின்றார். இது இயற்கை. இதுவே மனம் செயல்படும் விதம். மனமே நோயின் அஸ்திவாரம். ஓரளவு குணத்தைக் கண்டவுடன் மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்கின்றது. மனம் எதிர்பார்க்கும்பொழுது நாமும் அத்துடன் சேர்ந்துகொண்டு கற்பனைக்கு ஜீவனத்தால் அது மனத்தை வலுப்படுத்துவதாகும். நோய்க்கு அஸ்திவாரமான மனத்தைத் தூண்டினால், மறுநாள் காலையில் எழுந்தவுடன் நோய் அதிகரித்திருப்பது தெரியும். எண்ணம் மனத்தை நாடினால் நோய் அதிகமாகும். நோயைவிட்டு அகன்று மனம் அன்னையை நாடினால் மனம் அமைதியுறும். நோய் குறையும். நோய் குறைய ஆரம்பித்தவுடன் அன்னை நினைவை அதிகப்படுத்திக் கொண்டும், நன்றியறிதலுடன் அன்னையை நினைத்தால் மனம் நிறைவுறும். அதனால் நோய் தீரும். இருந்தாலும் மனம் நோயைக் கருதினால் வேறு பக்கம் மனத்தைத் திருப்ப முயல வேண்டும். சிறு தேவதைகளைத் தொழும் வீட்டிலும், அவர்கள் படம், சிலையுள்ள இடங்களில் சூழல் கறைபட்டிருக்கும். கொச்சையான பாஷையில் கூறுவதானால் தீட்டுப்பட்டிருக்கும். அங்கு மனம் நோயை அதிகமாக நாடும். குப்பை, அழுக்கு மலிந்த இடத்திலும் மனம் நோயை நாடும். மனம் நோயை அதிகமாக சிந்தித்தால், குணம் தள்ளிப் போகும்.

குப்பை நிறைந்த வீட்டைச் சுத்தம் செய்யும் வரை, சிறு தேவதைகளை விட்டு அகலும் வரை, தன் அறிவில்லாத பிடிவாதத்தை விட்டொழிக்கும் வரை, இவர்களுடைய பிரச்சினை தீராது. வந்த வாய்ப்பு பலிக்காது. அவை பலிக்காத வாய்ப்பாகாது, தீராத பிரச்சினை ஆகாது.

தீராத பிரச்சினையுள்ள அன்னை பக்தர்களிடம் இது போன்ற குணம், செயல், போக்கு ஒன்றிருக்கும். அதை விட்டுவிட அவர்கள் முன்வராமல், அன்னை என் பிரச்சினையைத் தீர்க்கவில்லையே என்பது சரியாகாது. அருள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும். எந்த வகையிலும் நாம் அதற்குத் தடையாக இருத்தலாகாது.

அன்னையின் அருளுக்கு எல்லையில்லை. நாமே அதற்குத் தடை ஏற்படுத்தி விட்டு, அருளுக்கும் எல்லையுண்டு என்று நினைப்பது சரியில்லை.

நம் பிரார்த்தனை பூர்த்தியாக நம் மனத்தின் அபிப்பிராயங்கள் தடைகளாக இருப்பதுண்டு.

புதுவீடு குடிபோனபொழுது வீட்டுக்காரர் ஓர் அலமாரி செய்து தருவதாகச் சொன்னார். அது வரும்வரை எல்லாப் பொருள்களையும் தரையில்

வைத்திருந்தார் பக்தர். 5 மாத வாடகையை அட்வான்ஸாகப் பெற்றுக் கொண்டவர் மாதங்கள் கடந்தும் அலமாரி செய்து தரவில்லை. அடுத்தவர் ஒருவரிடம், தாம் அலமாரி செய்யப் போவதில்லை என்று அறிவித்ததைக் கேட்டுக் குடியிருக்கும் பக்தருக்கு எரிச்சல் வந்தது. சரி, அலமாரி வந்தால்தான், இந்த மாத வாடகை கொடுப்பது என்று முடிவு செய்தார். தொடர்ந்து செய்திகள் வந்தபடி இருந்தன. கொஞ்சம் சாமான்கள்தாமே, தரையில் இருந்தால் என்ன என்று ஒரு செய்தி. இந்த மாதம் வேறு செலவு இருக்கிறது என்று மற்றொரு செய்தி. அலமாரி கொடுப்பது எங்கள் இஷ்டம். நிர்ப்பந்தமில்லை என்று மற்றொரு செய்தி. பக்தர், சரி செய்திகள் வரட்டும், வாடகை கொடுத்தால்தானே, என்ன செய்வார் பார்க்கலாம் என்று தீவிரமாக முடிவு செய்தார். அதன்பின் யோசனை பிறந்தது. வாடகையை நிறுத்திக் காரியத்தைச் சாதித்தால், எனக்குப் பிடிப்பில் நம்பிக்கையிருக்கிறது. அன்னைமீது நம்பிக்கையில்லை என்றாகிறது அன்றோ? என்ற நினைவு வந்தது. தேதி வந்தவுடன் வாடகையைக் கொடுக்க முடிவு செய்தார். நம்பிக்கையை அன்னைமீது வைத்தார். வாடகையைக் கொடுத்தார். அடுத்த நாள் அலமாரி வந்திறங்கியபோது அவருக்கு ஏற்பட்ட ஆச்சரியம் பெரியது.

பாத்ரூமில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று வீட்டுக்காரரிடம் சொன்னால் சில நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதுவரை எதிர் வீட்டில் போய் குளித்துக் கொள்ளுங்கள். பிறகு ரிப்பேர் செய்கிறேன்'

என்ற பதில் முனிவருக்கும் கோபத்தை ஏற்படுத்தும். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, கோபம் வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்துவிட்டு ஆபீஸுக்குப் போய் திரும்பி வந்தால் ஆள்கள் பாத்ரூம் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.


அன்னைக்குள்ள முறைகளைத் தவறாமல் பின் பற்றினால் பிரார்த்தனை பலிப்பதில் தாமதமிருக்காது. அன்னையின் சக்தி பலிப்பதற்கு நம் மனமும் அவர்கள் முறையை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.




No comments:

Post a Comment

Followers