Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, May 21, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -7



ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -7

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்



கடமையில் ஆர்வம் காண்பிக்க வேண்டும்:


கடமைகளைச் செய்பவன் சிறப்பான மனிதன். அவர்கள் குறைவு. கடமைகளைச் செய்பவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு செய்கிறார்கள். மாணவனுக்கு விளையாட ஆசை; அவனது கடமை படிப்பு. படிப்பின் அவசியத்தால் விளையாட்டை விட்டு, படிப்பை ஏற்றுக்கொண்டு படிக்கிறான். இதுவே சிறப்பு. ஆனால் அன்னை சொல்வது

விளையாட்டில் உள்ள ஆர்வம் படிப்பில் இருக்க வேண்டும் என்பது. கூர்ந்து கவனித்தால் இது அசாத்தியமான காரியம். சொல்லப் போனால் மனித சுபாவத்தில் இல்லாத ஒன்று.

கசப்பான கடமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பெரியது. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிப்பது மனித மனத்தில் இன்றில்லாத சிறப்பு. இந்தச் சிறப்புக்கு ஒருவன் தன்னைப் பாத்திரமாக்கிக்கொண்டால், அவன் மனிதனை விடவும், தேவரை விடவும் உயர்ந்தவனாகிறான்.

ஒவ்வொரு கடமையை நிறைவேற்றுவதிலும் முழு ஆர்வம் உடையவன் வாழ்வு உயர்ந்தது. அது யோக வாழ்வாகும். அவனுடைய வாழ்வில் அன்னை பூரணமாகப் பரிமளிக்க முடியும். அன்னையின் அநேக விதிகளில் இது ஒன்றேயானாலும், முழுமையாகப் பின்பற்றினால் அன்னையின் முழு வெளிப்பாடும் அவனுடைய வாழ்வில் ஏற்படும்.
---------------------------------------------------------------------

புரளி பேசாதிருத்தல்: சில்லறையான பழக்கங்களை ஒதுக்குதல்:

அன்னையை ஏற்றுக்கொள்பவர்கள் பொதுவாகச் சிறப்பான குணங்களையுடையவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் உயர்ந்த பக்தியும், சின்ன புத்தியும் சேர்ந்து காணப்படுவதுண்டு. பக்தியின் உயர்வால் அன்னையிடம் வந்துவிடுகிறார்கள். பழக்கத்தை விட டிவதில்லை. இந்தப் பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே இம்முறை பலன் அளிக்கும். தணிவான பேச்சை ஏற்றுக் கொள்ளுதல், தியானம் பழகுதல் எவ்வளவு கடினமோ, அந்த அளவு இப்பழக்கங்களை விடுதல் கடினம். அந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்வதால்தான் உயர்ந்த பலன் கிடைக்கிறது. இம்முறையில் முழுப் பலன் கிடைக்க வேண்டுமானால் இப்பழக்கங்களை விட்டு விடுவதுடன், இவற்றின் மீது மனதில் உள்ள ஆசையையும் முழுவதுமாக நீக்க வேண்டும்.

---------------------------------------------------------------------
ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடியெடுத்து வைக்க வேண்டும்:

இதுவரை சொல்லிய முறைகளில் எல்லாவற்றையும்விட இது கடுமையானது. சாதாரண அமெரிக்கர் ஒருவர் Larry Apply என்று பெயருடையவர், நூறு கோடி ரூபாய் செலாவணி உள்ள கம்பெனியின் தலைவராக வந்தார். படிப்படியாக அவரது வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, எளிமையான நிலையிருந்து உயர்வுக்கு எட்டினார். இவர் "தினமும் ஏதாவது புதியதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். தம் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு நுணுக்கத்தை அவசியமாக அன்றாடம் அவர் கற்றுக்கொள்வார். இரவு தூங்கப் போகுமுன் இன்று எதைக் கற்றுக்கொண்டோம் எனத் தம்மையே கேட்டுக்கொள்வார். ஒரு நாள் தம்மால் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று அறிந்து, அன்று அவரால் தூங்க முடியவில்லை. அகராதியை (dictionary) எடுத்துத் தமக்குப் புதிய சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டார். அதன் பின்னரே அவரால் தூங்க முடிந்தது. இது ஒரு அற்புதமான கொள்கை.

அன்னையிடம் வந்தபின் ஆயுளில் ஒரு முறை அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் அது தவம் பலித்ததற்கு நிகராகும். தினமும் ஏதாவது ஒரு விஷயத்தில் செய்வதெப்படி? கடினம்தான். அந்தக் கடினமாக முறையைக் கைக்கொண்டு பலன் அடைய வேண்டும் என்பதே கொள்கை. இதிலும் ஒரு சிறப்பு; மனம் பக்குவம் அடைந்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால், அன்னை கடினமான முறையையும், சந்தோஷமான முறையாக மாற்றிக் கொடுப்பார். பின்னர் ஒவ்வொரு செயலிலும் எப்படி அன்னையை நோக்கி முன்னேறுவது என்பதை அன்னையே புரிய வைக்கிறார். வாழ்வின் கூறுகள் ஆயிரம். ஒவ்வொரு செயலுக்கும் நூறு பகுதிகள் உள்ளன. ஒரு பகுதியிலாயினும் நாம் அங்கு ஒரு முன்னேற்றத்தைக் காண முடியும். இதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் ஒருவர் ஏற்றுக்கொண்டால், இது போன்ற புதுமை இல்லை என்பதை அவர் காண்பார். அன்னையின் சிறப்பான பார்வைக்குரியவராவார் அவர்.

---------------------------------------------------------------------
நன்றியறிதல்:

நன்றியுணர்வு மனிதனுடைய பண்புகளில் சிறந்த ஒன்று. இதன் சிறப்பு மென்மை. மிருதுவான குணமும், மென்மையான சுபாவமும் உடையவர்களுக்கு இயல்பாக அமைவது நன்றியுணர்வு. நன்றி என்று பொதுவாக நாம் அறிந்தது பிறர் செய்த உதவிக்குப் பிரதியாக நம்முள் எழும் நல்ல எண்ணமே. பெற்ற உதவிக்குப் பலனாக மனம் கனிந்து இனிப்பதையே நன்றியுணர்வு என்று நாம் சொல்கிறோம். மேலைநாட்டில் thank you என்று சொல்வது போன்ற பழக்கம் நம் நாட்டில் இல்லை. அதற்கொத்த சொல்லும் தமிழில் எழவில்லை. சொல்லால் நம் நன்றியைத் தெரிவிக்கும் பழக்கம் நம் நாட்டில் இல்லை. ஒருவர் நமக்கு நல்லது செய்தால் நம் உள்ளம் தழுதழுத்துப்போகிறது. உணர்ச்சி மூலமே நன்றியைத் தெரிவிப்பது நம் இயல்பு.

நன்றியுணர்வு என அன்னை குறிப்பிடுவது ஒரு பெரிய கருத்து. நாமறிந்த நன்றி அதனுள் ஒரு பகுதியாகும். இவ்வுணர்வு பூவுலகத்திற்குப் புதியது என்றும் அன்னை கூறுகிறார். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு தெய்வம் இருப்பதைப் போல் நன்றிக்கும் ஒரு தெய்வம் உண்டு என்கிறார் அன்னை (Goddess of  gratitude). அன்னை தாம் கண்ட காட்சி (vision) ஒன்றில் பல தெய்வங்கள் கலந்துகொண்டதாகவும், ஓர் இளந்தெய்வம் வெண்ணிறமாகக் காணப்பட்டதாகவும், அவரை அடையாளம் புரியாமல், "நீங்கள் யார்?'' என்று கேட்டதற்கு, "நான் புதியதாகப் பூமியில் உதித்த நன்றி என்ற தெய்வம்'' எனச் சொல்லியதாகவும் கூறுகிறார்.

நிகழும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் இறைவனின் சக்தி செயல்படுவதை அறிந்துணர்வதையே நன்றியுணர்வு என்று அன்னை குறிப்பிடுகிறார். பொதுவாக நாம் எல்லா நிகழ்ச்சிகளையும் தாமே

நடப்பவை என்று கொள்கிறோம். சிறப்பாக நடப்பனவற்றையே நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். இயல்பாக நடக்காத ஒன்றை, ஒருவர் நடத்திக் கொடுத்தால் நாம் அதைக் குறிப்பாக உணர்கிறோம். நன்றிக்கு உரிய செயலாக அதை நாம் கருதுகிறோம். அன்னசத்திரம் கட்டுதல், ஏழைக்கு எழுத்தறிவித்தல் போன்ற செயல்களை நாம் நம் நன்றிக்கு உரியவை எனக் கொள்கிறோம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று உணர்ந்தவருக்கு ஒவ்வோர் அசைவும் நம் நன்றிக்குரியது எனத் தெரிகிறது. தம் அறைக்கு வெளியேயுள்ள தென்னை மரத்தில் பானை வெடித்துப் பூ மலர்வதைத் தாம் வியந்து கூர்ந்து கவனித்து இறைவனுக்கு நன்றி தெரிவித்ததை அன்னை குறிப்பிட்டுள்ளார். தாம் பிரான்சிலிருக்கும்பொழுது, குழந்தைகள் தெருவில் ஆர்ப்பரித்து விளையாடியதைப் பார்த்து மெய்சிலிர்த்து இறைவனுக்கு நன்றி தெரிவித்ததை அன்னை கூறியிருக்கின்றார். புற நிகழ்ச்சிகளில் இறைவனைக் கண்டு, தாம் அவனைக் கண்டதால் புளகாங்கிதம் அடைவதை அன்னை நன்றியுணர்வு என விளக்கம் அளிக்கின்றார்.

நன்றி என்பது அன்பு என்பதைப் போல் உயர்ந்த குணம். இவற்றை உணரும் தன்மை மனிதனின் உயர்ந்த பகுதியான ஆத்மாவுக்கே உரியது. உடலுக்கும், வெற்று உணர்வுக்கும், சாதாரண அறிவுக்கும் அத்திறன் இல்லை. அன்னை நன்றியை மனிதன் உணரும் பகுதி (psychic being) சைத்தியப்புருஷன், ஹிருதயத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கட்டைவிரல் பிரமாணமுள்ள ஆன்மா என்கிறார். தெளிவாகச் சொல்வதாக இருந்தால், அதை ஆன்மாவின் பிரதிநிதி என்கிறார். அந்த ஆன்மா விழிப்பாக உள்ளவர்களுக்கே நன்றியுணர்வு உண்டு. நன்றி உணர்வை வளர்த்துக்கொண்டால், ஆன்மா விழிப்படையும். குழந்தைப் பருவத்தில் ஆன்மா விழிப்பாக இருக்கின்றது என்ற மரபை விளக்கும் வகையில் உள்ளது, "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்'' என்ற பழமொழி. தெய்வத்தன்மை குழந்தைக்கு உண்டு என்பது நம் மரபு.

அன்பர் வழிபாட்டில் நன்றியுணர்வு எந்த இடம் பெறுகிறது? வழிபாடு என்பது பல வகையின. பரம்பரையிருந்து விலகியுள்ள பூரணயோகத்தில் வழிபாட்டுக்குகந்த முறைகளை இக்கட்டுரையில் சொல்வருகிறேன். நன்றியுணர்வு வழிபாட்டில் எப்படி வரும் என்பது ஐயம்.

நன்றியுணர்வை நாம் வலியுறுத்தும்பொழுது (சைத்திய புருஷன்) ஆன்மா விழிப்படைந்து செயல்படுகிறது. ஆன்மா அசைந்து தன் செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே ஆன்மீக வழிபாடு. எனவே ஒவ்வொரு செயலிலும் நாம் இறைவனுக்கு நன்றி கலந்த சமர்ப்பணம் செய்தால், வெற்று மனித வழிபாடு ஆன்ம வழிபாடாக மாறி உயருகிறது. இதுவே அடிப்படை.

மேலும் சொல்லப்போனால், வழிபாட்டையும் கடந்து நன்றி உணர்வு நம் வாழ்க்கைக்கு உறுதுணையான கருவியாகவும் பயன்படக்கூடும். அத்திறனும் அதற்குண்டு. ஒரு வகையாகப் பார்த்தால், மனிதன் நல்லுணர்வோடு வாழும்போது அவன் வாழ்க்கை ஆற்றொழுக்காக, இடையூறின்றி, பிரச்சினையின்றி, தங்கு தடையின்றி, மேலும் மேலும் வளர்ந்து பெருகிச் செல்கிறது. நல்லுணர்வு குன்றி, நன்றியுர்வை மறந்து, மற்ற உணர்வு மேலிடும் பொழுது பிரச்சினைகள் தோன்றுகின்றன. மற்ற உணர்வை வலியுறுத்தினால், மனம் கடுமையடைந்தால் பிரச்சினைகள் வலுக்கின்றன. எனவே பிரச்சினைகளை அழிக்க மனிதன் கடுமையான உணர்வை விட்டொழித்து, நன்றி போன்ற நல்லுணர்வை வளர்த்துக்கொண்டால் போதும் எனவும் சொல்லலாம்.

உதாரணமாக, செவ்வையாக நடக்கும் ஒரு காரியம் திடீரெனத் தடைப்பட்டால், அன்பர் ஒரு கணம் நிதானித்து அக்காரியத்தின் பகுதியை நினைவுகூர்ந்து, எங்காவது நன்றியறிதல் குறைந்துவிட்டதா எனப் பார்த்து, குறைந்த இடத்தைக் கண்டு, குறைவை நிறைவாக்கினால் பிரச்சினை மறையும் என்பது இதன் அடிப்படைக் கருத்து.

கற்பனைக்கெட்டாத விலையுள்ள பொருளைப் பெற, ஊரில் எவருக்கும் கிடைக்கமுடியாத சிபாரிசு கிடைத்த சமயத்தில், வந்த பெருந்தடைகளை நன்றி குன்றிய இடத்தில் குறைவை நிறைவு செய்து, தடையை விலக்கிப் பலன் பெற்றவர் உண்டு. அன்னை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனிதர்களும், பொருள்களும், நிகழ்ச்சிகளும் வழக்கத்திற்கு மாறாக நன்றியுர்வுள்ளவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் மனிதர்கள் தவறினாலும், உதவியைப் பெற்றுக்கொண்ட பொருள்கள், இடங்கள் நன்றியை உணர்ந்து அதன்படி நடப்பார்கள்.

ஒரு பிரம்மாண்டமான எஸ்டேட், ஆங்கிலேயருடையது. உலகத்தில் யாரும் காணாத மாதிரி விவசாயம் செய்தார். அவர் இருந்த இடத்திருந்து 15 மைலுக்கு அப்பால்தான் எலக்ட்ரிசிட்டி இருந்தது. எல்லா வேலைகளையும் முடித்த அவர் மின்சாரம் பெற முனைந்தார். அருகிலுள்ள கிராமத்திற்கு மின்சாரம் வருவதானால் தான் எஸ்டேட்டிற்குக் கிடைக்கும் என்பதால், அந்தக் கிராமத்திற்காக இவர் முனைந்து பாடுபட்டார். மின்சாரம் மின்னல் வேகத்தில் கிராமத்திற்கு வந்துவிட்டது. அந்த ஊர் மக்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை. தெருவிளக்கோடு நின்றுவிட்டது. Estimate போட்ட டிபார்ட்மெண்டார் பல வழிகளையும் (route) கணித்து, சிக்கனமான வழியாக (route) மின்சாரத்தைக் கொண்டு வந்தனர். இந்த முறையில் எஸ்டேட் விடுபட்டுவிட்டது. எஸ்டேட்டுக்கும், எலக்ட்ரிக் லைனுக்கும் 2 மைல் இருக்கிறது. எனவே எஸ்டேட்டிற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. 15 வருஷமாகியும் கிடைக்கவில்லை. எஸ்டேட்டோடு முக்கியமாக தொடர்புள்ள ஒருவர் வெளியூரிலுள்ள அவருடைய நண்பரை அழைத்து வந்து எஸ்டேட்டைக் காட்டி உதவி கேட்டார். நண்பரின் செல்வாக்கு 15 நாளில் எஸ்டேட்டிற்கு மின்சாரத்தைக் கொண்டுவந்து கொடுத்தது. மின்சாரம் கிடைத்த செய்தியைக்கூட எஸ்டேட்டில் உள்ளவர்களோ, உதவியைக் கேட்டவரோ வாங்கிக் கொடுத்தவருக்குச் சொல்லக்கூட இல்லை. அவரே டிபார்ட்மெண்டில் கேட்டு விஷயத்தைத் தெரிந்து கொண்டதுடன்,

உதவியைப் பெற்றவர்களின் "நன்றியுணர்வை''யும் தெரிந்துகொண்டார். சாதாரணமாக மனிதர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள். ஏதோ ஒரு வகையில் அன்னையிடம் தொடர்புள்ள இடம் இது. 20, 30 ஆண்டுகட்கு முன் அன்னையின் கார் அந்த வழியாகப் போய் இருக்கின்றதாம்.

கொஞ்ச நாள் கழித்து மின்சாரத்தை எஸ்டேட்டுக்கு வாங்கிக் கொடுத்தவர் தம் ஊரில் தம் நண்பரிடம் ஓர் அல்சேஷியன் குட்டி வேண்டுமெனக் கேட்டார். நண்பர் நல்லதொரு நாய்க்குட்டியை அவருக்கு இரண்டு நாளில் கொண்டுவந்து கொடுத்தார். பிறகு விசாரிக்கப்போனால், அந்த நாய்க்குட்டி மேலே சொன்ன எஸ்டேட்டில் இருந்து வந்ததாம். மனிதர்களுக்கில்லாத நன்றியுணர்வை உதவியைப் பெற்றுக்கொண்ட நிலம் தெரிவிக்கிறது. அன்னையின் சிறப்பு இது.

ஒரு பெரிய சொத்து. உரிமைப் பிரச்சினை எழுந்தது. அநியாயக்காரன் அநியாயமாக எழுப்பியது. பிரச்சினை நாளுக்கு நாள் வளருகின்றதே தவிர குறையவில்லை. பல ஆண்டுகளாக வம்பு, பின்னர் வழக்கு, 3 கோர்ட்டுகளுக்குப் போய்விட்டது. அநியாயக்- காரனுக்கே காலமாயிருந்தது. பலனைப் பெற வேண்டியவர்கள் ஒன்றுகூடினார்கள். அநியாயத்தை வாய் ஓய நிந்தித்தார்கள். ஒருவர் மட்டும் கேட்டார், "அடிப்படையில் பெரும் பலனைப் பெற வேண்டியவருக்கு நன்றியுணர்விருக்கிறதா?'' என்று. சம்பந்தப்பட்டவர் வெட்கப்பட்டார். மனம் மாற சம்மதிக்கவில்லை. ஆனால் "நான் அந்தக் குறை உடையவன்'' என்று ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை கோர்ட்டில் இருந்த வழக்கு வெளியே கொணரப்பட்டு நியாயமாகத் தீர்ந்தது. நன்றியறிதலுக்குள்ள வலு அது. ஒரு தடங்கல் ஏற்பட்டால், அது சம்பந்தமாக ஏதாவது ஓர் இடத்தில் நன்றியுணர்வு குறைவதைக் கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்தால், தடங்கல் விலகும்.

அன்னையிடம் வந்தபின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்லவைகட்கு எல்லாம் பூரண நன்றியுணர்வுடன் மனம் சிறப்படைந்தால், எதிர்

காலத்தில் தடங்கல், குறை, பிரச்சினை வாராது. தற்போது 6 பிரச்சினைகள் உள்ள ஒரு பக்தர் தாம் அன்னையை ஏற்றுக் கொண்டதிருந்து நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்து நன்றியுணர்வை பூரணப்படுத்தினால், அந்த 6 பிரச்சினைகளும் விலகிவிடும்.

நன்றியுணர்தல் வழிபாட்டுக்குரிய முறை; பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல சிறந்த முறையும்கூட.
---------------------------------------------------------------------

                 

- தொடரும் ...

No comments:

Post a Comment

Followers