Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Wednesday, April 17, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -6


ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -6

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்



ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல்:


அன்னையைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல. அவை எல்லாம் (public secret) எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யங்கள் எனலாம். உதாரணமாக, பொய் சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. ஆனால் வேறொரு வகையாகப் பார்த்தால், அதுவே பெரிய யோக ரகஸ்யமாகும். அதனால் சாதிக்க முடியாதயோக சித்திகள் கிடையாது. அழைப்பு, சமர்ப்பணம் என்பவை அதுபோல் அன்னைக்கு முக்கியமானவை. இதைத் தெரியாதவர்கள் இல்லை. எவரும் பின்பற்றுவதில்லை. அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல் எனும்போது அன்னை எழுதியுள்ளவற்றைப் படிப்பது எனப் புரிந்துகொண்டால் விஷயம் தடம் மாறிப்போகும். எதிர்ப்பார்த்த பலன் இருக்காது. சாதாரணமாக ஒரு விஷயத்தைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கும் (to know it as information), அதன் உட்கருத்தை உணர்ந்து புரிந்து கொள்வதற்கும் (to receive it as knowledge) உள்ள வித்தியாசத்தை ஓர் உதாரணத்தின் மூலம் கூறுகிறேன்.

அன்னை தம் சாதகர்கள் மௌனமாயிருப்பதை விரும்பவில்லை. அதிகமாகப் பேசுவது தவறு என்கிறார். நம் மரபுக்கு மாறாகப் பேச்சை அவசியமான அளவுக்குப் பேச வேண்டும் (controlled speech) என்று சொல்கிறார்கள். இதன் உட்கருத்து விளங்காவிட்டாலும், இந்த முறையைக் கையாள்பவர்களுக்கு அது பலன் தரும். (இங்கு நாம் கருதுவது என்னவென்றால் முறையைக் கையாளாமல், அம்முறையின் சூட்சுமக் கருத்தைப் புரிந்துகொள்வதால் அம்முறையைக் கையாண்ட பலன் எப்படிக் கிடைக்கும் என்பதே. இந்தத் தலைப்பு அதற்காக ஏற்பட்டதே. ஒரு முறையைக் கையாண்டால் அதற்குப் பலன் உண்டு. எல்லாக் கருத்துகளின் சூட்சுமத்தை உணர்ந்தால், ஒரு முறையைக் கையாளும் பலன் உண்டு). அளவோடு பேச வேண்டும் என்பதை எவரும் எளிமையில் புரிந்துகொள்ளலாம். மௌனம் தேவையில்லை. அதிகமாகப் பேசக்கூடாது. தேவையான அளவுக்குப் பேசவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. அப்படிப் புரிந்துகொண்டால் அதன் உட்கருத்துப் புரியாது. சூட்சுமம் புரியாது. இதன் உட்கருத்து ஒரு யோகப் பயிற்சி. பேசுவது இயல்பு. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். அதை விலக்கி, 10, 20 ஆண்டுகள் ஒருவர் பேசாமலிருப்பது சிறப்பு. அவரை மௌனி, சாது என்கிறோம். இவர் வாயால் பேசுவதில்லை. மனத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்.   மனத்திலும் மௌனம் நிலைத்தால் இவர் முனிவராகிறார். அது பெரிய நிலை. மௌனம் என நாம் சாமியார்களிடையே அறிந்தது வாயால் பேசுவதில்லை என்பதே. அதுவும் மிகக்கடினம்.

அன்னை, மனத்தில் உள்ள மௌனம் நிலைத்த பிறகும் வாயால் பேசாமல் இருப்பது அவசியமில்லை என்கிறார். கரு உள்ள இடம் இதுதான்.

சிறப்பான மனிதன் யோகத்திற்கு வருகிறான். அவனைப் பேசு என்றால் பேசுவான். பேசாதே என்றால் பேசாமலிருப்பான். சாதாரண மனிதனால் முடியாததை அவன் செய்வான். ஆனால் அன்னை, "தேவைப்பட்ட அளவுக்குப் பேசு'' என்கிறார். கூர்ந்து கவனித்தால் வாயால் பேசாதவன் மனத்தில் பேசிக்கொண்டிருக்கிறான். மனத்திலும் மௌனம் பூண்டவனுக்கும் பேசவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது அழியவில்லை. தன் மன வலிமையால் அந்த ஆசையை அடக்கி வைத்திருக்கிறான். அவன் சில வார்த்தை பேச ஆரம்பித்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பேசுகிறான். ஏனெனில் பேசவேண்டும் என்ற ஆசை அழியவில்லை. அந்த ஆசையையும் ஒழித்தவன் சில வார்த்தைகள் பேசினால், அதன் மூலம் கட்டுப்பாட்டை இழக்கமாட்டான். எனவே அன்னை அளவோடு பேசு என்று சொல்வதன் உட்கரு பேசவேண்டும் என்ற ஆசையை அழித்திடு என்று பொருள். ஆசையானது பேச்சைப் பொருத்த அளவில் அழிக்கப்பட வேண்டும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

நமது அன்றாட வாழ்வில் பெற்றோருடன் பழகுவது, குழந்தைகளைக் கண்டிப்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, படிப்பது, பொழுதுபோக்குக்காக ஒன்றைச் செய்வது, என்றெல்லாம் சுமார் 400, 500 விஷயங்கள் உள்ளன. முதலில் சொல்லியதுபோல் - எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யம் - அன்னை ஒரே ஒரு விஷயத்தில்கூட நம் மரபை ஏற்றுக்கொள்வதில்லை. மரபில் உள்ள

ஒவ்வொரு விஷயத்திலும் அன்னை மாறுபட்ட கருத்தை, பழக்கத்தை அளிக்கின்றார். நாம் நம் வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அன்னை என்ன சொல்லியிருக்கிறார்? அதன் சூட்சுமம் என்ன? மரபிருந்து எப்படி அது மாறுபட்டது? என்பதைத் தெரிந்துகொண்டால் - ஒரு விஷயத்தில் இல்லை, எல்லா விஷயத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் - அந்த ஞானத்திற்கு ஒரு முறையை முழுவதும் கையாளும் பலன் உண்டு.

ஆன்மீக ஞானத்திற்கும் ( spiritual knowledge) அன்னையின் ஞானத்திற்கும் (Mother's knowledge) உள்ள வித்தியாசம் முக்கியமானது. ஆன்மீக ஞானத்தின் திறனை ஆன்மா மட்டுமே பெற முடியும். அன்னையின் ஞானத்தின் திறனை வாழ்க்கையும் பெற முடியும். ஒரு தபஸ்வி ஆன்ம ஞானம் பெற்றால், அதனால் அவர் மோட்சமடையலாம். அவருடைய வாழ்வைப் பொலிவு படுத்தும் திறன் அவருடைய ஆன்மீக ஞானத்திற்குக் கிடையாது. அவருக்கு வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கைத் தேவையும் இல்லை. அதனால் அவருக்குப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் ஞானி ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால், வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் எவரும் அவருக்குக் கட்டுப்படுவார்கள். அவர்கள் மூலமே அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அன்னையின் ஞானத்திற்குத் தன் நிறைவு (self fulfilment) உண்டு. ஞானம் இருப்பதால், தானே அது வாழ்க்கையில் பூர்த்தி பெறும். இது அன்னையின் சிறப்பு. அதனால் அன்னையின் முறைகளின் சூட்சும ஞானத்தை அறிவதால் அன்பர்களுக்கு வாழ்க்கையில் பூரணம் உண்டு.

          ---------------------------------------------------------


அன்னையின் நூல்களைப் படித்து ஆன்மீகப் பலன் பெறுதல்:

பகவான் எழுதியவை, அன்னை எழுதியவை ஆகியவற்றிற்கு மந்திர சக்தியுண்டு. தினமும் இந்த நூல்களில் சில பக்கங்களைப் படிப்பது தியானத்திற்கு ஒப்பாகும். படித்த முடித்தவுடன் தியானம் வருவது தெரியும். பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டவர் Life Divine படிக்கச் சொல்லிக் கேட்டு அதனாலேயே குணம் அடைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் Synthesis of Yoga எனும் நூலில் ஓரிரு பக்கங்கள் படிப்பது நல்லது என்று அன்னை சொல்கிறார். அன்னையின் நூல்களைப் பயிலும் முறையை, பொதுவாக, படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளுதல் நலம். ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயில விரும்புபவர்கள் தீவிரமாக ஒரு காரியத்தைச் செய்பவர்களாக (serious people) இருத்தல் நலம். அன்னையின் நூல்கள் எளிமையானவை. நுணுக்கமான கருத்துகளை அன்னை அவற்றில் தெரிவிக்கிறார். இந்நூல்களைப் பயில்பவர்கள் அன்னையின் விளக்கங்களின் நுணுக்கத்தை அறிந்து படித்தல் முழுப் பலனைத் தரும். அவை எளிமையாக எழுதப்பட்டுள்ளன.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்கள் எளிமையானவை அல்ல. ஆழ்ந்த கருத்துகளைத் தாங்கி வருபவை. சரியான மனப்பக்குவத்துடன் அவற்றைப் பயின்றால் பகவானுடைய (conciousness) யோகப் பக்குவம் படிப்பவரை வந்தடையும் என்கிறார்.

( Serious minded people) நெறியான வாழ்க்கையை உடையவர்களுக்குப் பகவானுடைய நூல்களும், மற்றவர்களுக்கு அன்னையின் நூல்களும் பொருந்தும். இவற்றைப் பயிலுவது ஒரு யோகப் பயிற்சியாகும். தியானத்திற்கு ஒப்பாகும்.



 ------------------------------------------

புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வைப் பிரதிபலிப்பதாகக் கருதுவது:

அடிப்படையில் மண்ணும், மனிதனும் ஒன்றே. நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம் என்ற கருத்தை அஸ்திவாரமாகக் கொண்ட கருத்து. மரத்தின் வேர், அடிமரம், கிளை, பட்டை, காய்ந்த சருகு, தளிர் இலை, பூ, மொக்கு, காய், பழம், எதையும் மைக்கிராஸ்கோப்பின் (microscope) அடியில் வைத்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருக்கும். பழத்திற்கு ருசி உண்டு; பூவுக்கு வாசனை உண்டு; தளிர் பச்சையாக இருக்கும்; பட்டை காய்ந்து போனது; ஆனால் மைக்கிராஸ்கோப்பின் அடியில் தெரிவது அவற்றின் அடிப்படை

அமைப்பு. அவை எல்லாம் ஒரே அமைப்பு. மேலும் சொல்லப்போனால், மரமும், அது வளரும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்திலிருக்கிறது; மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவே, மண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றேயாகும். அதே போல் நம் அக உணர்வுகள், புற நிகழ்ச்சிகள் என்கிறோம். அது நமக்குத்தான் வேறுபாடாகத் தெரிகிறது. புறமும், அகமும் ஒரு பெரிய சூழலின் பகுதிகளே. எனவே அகமும், புறமும் ஒன்றே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்துகொள்ளலாம்.

கண்ணாடி முகத்தைப் பிரதிபலிக்கிறது. புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பல நாள் கழித்து வரப்போகும் பெரிய நல்ல செய்தியையும், கெட்ட செய்தியையும் புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவரால் தெரிந்துகொள்ள முடியும்.

இரு கூட்டாளிகள். பணம் போட்டவர் ஒருவர். உழைப்பவர் ஒருவர். Project ஆரம்பித்த 12 மாதத்தில் 2 இலட்ச ரூபாய் முதல் 6 இலட்சம் இலாபம் சம்பாதித்தது. தகராறு வந்தது. கஷ்ட கூட்டாளி தாமே விலகிவிட்டார். விலகியவர் ஆசிரமச் சாப்பாட்டறையில் சாப்பிட வரிசையில் வந்து நின்றார். தோளில் ஒருவர் கைவைத்து அவரை அழைத்து, கையில் கொஞ்சம் பாதாம் அல்வாவைக் கொடுத்து, "அன்னையிடமிருந்து வந்தது; பிரசாதம்; சாப்பிடுங்கள்'' என்றார். 11ஆம் நாள் பணம் போட்டவருடைய குடும்பத்தலைவர், கூட்டாளிகளுக்குள் நடந்ததைக் கேள்விப்பட்டு Projectஐ கஷ்டக் கூட்டாளிக்கே கொடுக்கும்படிப் பணம் போட்டவரைப் பணித்தார். அன்னையிடமிருந்து வந்த பிரசாதம் அவர் மனநிலையைப் பிரதிபத்தது. கூட்டாளிகளுக்குள் பிணக்குக் கூடாது என்ற மனநிலை அன்னையின் பிரசாதத்தில் பிரதிபலிக்கிறது. அன்னையின் பிரசாதமாக அவருக்கு முழு Project கிடைத்தது.

பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல் புரிந்துகொள்ள ஆரம்பித்து, கடைசியில் மிகச்சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அதே போல் விளக்கம் தெரிந்துகொண்டால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதற்குச் சமம். ஒருவருக்கு வாய் தெற்றும் (stammering). அவர் யாரைப் பார்த்தால் வாய் அதிகமாகத் தெற்றுகிறது, யாரைப் பார்த்தால் குறைவாகத் தெற்றுகிறது என கவனிக்க ஆரம்பித்தால், இந்த படிப்பினையே அவருடைய தெற்றுவாயை முழுவதுமாகக் குணப்படுத்த உதவும்.

நாம் இருக்கும் இடம், நாம் பழகும் நபர்கள், மனத்தில் எழும் எண்ணங்கள், ரோட்டில் போகும்பொழுது கண்ணில் படும் காட்சிகள், காதில் விழும் சொற்கள், ஆகிய அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள்ள தொடர்பு தெளிவாகத் தெரியும். நம் மனம் பதட்டமாக இருந்தால், கண்ணில் படும் காட்சிகள் சச்சரவாக இருக்கும். கண்ணில் தெரியும் தோற்றம் இனிமையானதானால், நம் எண்ணங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். ஒருவர் இப்பயிற்சியை ஆரம்பித்துக் கூர்மையாகத் தம்மையும், நிகழ்ச்சிகளையும் கவனித்தால், அவருடைய செயல்கள் சிறப்படையும். அந்நிலைக்கு வந்தவருக்கு அவரை அறியாமல் எதுவும் நடக்க முடியாது. அவருடைய வாழ்க்கை அந்த அளவில் அவருக்குக் கட்டுப்படும். அவரால் தம் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெருந்திறன்.

---------------------------------------------------------------------

                   

- தொடரும் ...

No comments:

Post a Comment

Followers