Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, March 21, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழி முறைகள் -3


ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழி முறைகள் -3 

(From the Book : அருளமுதம்.

- திரு. கர்மயோகி அவர்கள்

மாதக் காணிக்கை (Prosperity Offerings):


நம் மரபில் ஏற்பட்ட ஒரு முக்கியமான பழக்கம் தெய்வத்தை வழிபடும் பக்தன் தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் வழிபாட்டில் ஈடுபடுத்துகிறான். வழிபாடு முழுமையாகவேண்டி வாயால் துதி பாடி, மனத்தால் பக்தி செலுத்தி, உடலால் உழவாரப்படை பணி போன்ற உழைப்பை நல்கி, தன் கரணங்கள் அனைத்தையும் வழிபாட்டில் பக்தன் ஈடுபடுத்துகிறான். மனத்தால் எவரும் பக்தி செலுத்த முடியும். வாயால் எல்லோராலும் துதி பாட முடியும். ஆனால் கோயிலுக்குப் போகின்ற எல்லோராலும் உடலால் உழைப்பை நல்க வாய்ப்பிருப்பதில்லை. இது சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட விளைவு.

ஜீவனால் மலர்ந்து தெய்வத்தைத் தன்னுள் அழைப்பது சிறந்தது. அது முடியாதவர்கள் மனதால் தெய்வ நாமத்தை உச்சரிக்கின்றார்கள். அதுவும் முடியாதவர்கள் வாயால் நாம ஜெபம் செய்கிறார்கள். உடலால் தெய்வத்திற்குப் பணி செய்தால்தான் உடலின் பங்கு பூர்த்தியாகும். இதைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பின் பலனைத் தெய்வத்திற்குச் சமர்ப்பித்தால், உழைப்பால் வந்த ஊதியத்தைச் சமர்ப்பணம் செய்தால், உடலால் தெய்வ வழிபாடு செய்ததற்குச் சமமாகும். இதுவே காணிக்கை செலுத்துவதன் ஆன்மிக அடிப்படை.


எந்தக் கரணத்தால் இறைவனைப் பூஜிக்கின்றோமோ, அந்தக் கரணம் அருளால் நிரம்பி வழிகிறது. ஸ்தோத்திரம் பாடி வழிபட்டால், மனம் இறைவனது அருளால் தெளிந்து, விசாலமாகி, புத்தி கூர்மை ஏற்படும். பக்தியால் பரவசப்பட்டால், மன வியாகூலங்கள் விலகி, உள்ளம் பூரித்து, சந்தோஷத்தால் நிறைகிறது. ஒரு கரணத்தால் செய்யும் தொண்டிற்கு மற்றொரு கரணத்தை நிரப்பும் திறன் இல்லை. ஆங்கிலத்தில் அதிகத் திறமையுள்ள மாணவனுக்கு கணிதத்தில் அதனால் மார்க் வாராது. கணிதத்தில் அவன் வாங்கிய 12 மார்க் 42ஆக வேண்டுமானால், 
அவன் தன் நேரத்தைக் கணிதப் பயிற்சியில் செலவிட வேண்டும். கணிதத்தில் மார்க் குறைவாக இருப்பதால், ஆங்கிலப் புத்தகங்களை அனுதினம் படித்தால், அது கணிதத்திற்குப் பயன்படாது.

பொருள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. பொருளை ஈட்டுவது உடலும், அதன் உழைப்பும். பக்தன் தன் வருமானம் பெருக வேண்டுமென அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், அவன் அன்னைக்கு உடலால் சேவை செய்ய வேண்டும். அதுவே அவனுக்கு நேரிடையாக உதவுவது. அதற்கு நேரிடையாக உதவ, அவனது உடலால் அன்னைக்குச் செய்யும் சேவை. இந்தச் சேவையின் உட்கருத்தை அறிந்து, தான் செய்யும் சேவை அன்னைக்குச் சேரும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி என்பதை "சேவை'' என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. நேரடியாக ஆசிரமம் வந்து சேவை செய்வதும் எல்லோராலும் செய்யக்கூடியதில்லை. அன்னையின் பிரதாபங்களைச் சொல்லும் புத்தகங்களை ஏராளமாக விற்று, அதனால் தனக்கிருந்த ஏழரை நாட்டுச் சனியனின் தரித்திரத்தைப் போக்கி, அபரிமிதமாக வளம் பெற்றவர்கள் பலருண்டு. அதுவும் எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எதுவும் முடியாதவர்களுக்கு உகந்தது காணிக்கை. இதன் சிறப்பை விளக்க ஒன்றைக் குறிப்பிட்டால் போதும். ஆசிரம டிபார்ட்மெண்ட்களில் புதிய வேலை ஆரம்பிக்கும்பொழுது அன்னைக்குக் காணிக்கை செய்வது உண்டு.

ஜனவரி முதல் தேதியை வருஷத்திற்கு (prosperity day) சுபிட்ச தினம் என அன்னை கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஆசிரம சாதகர்கட்கு அன்னை அவர்களுடைய தேவையை தாமே வழங்கி, தரிசனம் கொடுத்து, அனுக்கிரஹம் செய்ததுண்டு. அதனால் ஆசிரமத்தில் மாதம் முதல் தேதிக்கு சுபிட்ச தினம் (prosperity day) எனப் பெயர். இதெல்லாம் கருதியே அன்பர்கள் தங்கள் மாத வருவாயில் ஒரு பகுதியை அன்னைக்கு முதல் தேதியன்று அனுப்பி வைப்பது வழக்கம். 


ஓர் அன்பர் வேலை செய்த ஸ்தாபனத்தில் சம்பளத்தை 7 முதல் 10 தேதிவரையில் ஒரு பகுதியையும், 15 முதல் 20 தேதியில் அடுத்த பகுதியையும் கொடுப்பது நீண்ட கால வழக்கமாக இருந்தது. அங்கிருந்து ஆசிரமத்திற்கு ஓர் அன்பர் வர ஆரம்பித்தார். தம் ஊதியத்தில் ரூ.10ஐ காணிக்கையாக அனுப்பினார். அதே மாதம் ஸ்பதானத்தின் தலைவர் மாறினார். அவர் செய்த முதல் வேலை சம்பளம் சம்பந்தமானது. "சம்பளத்தைத் தாமதப்படுத்திக் கொடுப்பது சரியில்லை. இந்த மாதத்திலிருந்து சம்பளத்தை முழுவதுமாக முதல் தேதி மாலை கொடுத்துவிட வேண்டும்'' என்று கூறி, அதை நிறைவேற்றினார். அன்பர் சில மாதங்களுக்குப் பின் தம் காணிக்கையை ரூ.20ஆகச் செய்தார். அதே மாதம் சர்க்கார் புதிய சட்டம் போட்டு, அது போன்ற ஸ்தாபனங்களுக்கு சர்க்காரே நேரடியாகச் சம்பளம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்பருக்கு ஒரு மாதமாவது தம் முழு ஊதியத்தையும் அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்று ஆவல். ஓராண்டு கழிந்து அது முடிவு பெற்றது. தம் 188.75 சம்பளத்தைக் காணிக்கையாக அந்த டிசம்பரில் செலுத்தினார். அடுத்த டிசம்பரில் அவர் தினமும் ரூ.188.75 செலவு செய்யும் ஸ்தாபனத்தின் தலைவராகி, தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். 3 ஆண்டுகளுக்குப் பின் அவரது குடும்பத்தில் தினமும் ரூ.188.75 செலவாகும் நிலைக்குப் போய்விட்டார்.


மாதக் காணிக்கையாக 1 நாள் ஊதியம் கொடுப்பவருண்டு. வருஷத்தில் மொத்தக் காணிக்கை 1 மாத ஊதியமாக இருக்கும்படிக் கொடுப்பவருமுண்டு. காணிக்கை அவசியம். ஆனால் அதற்கு அளவு இல்லை. நம் பிரார்த்தனை பூர்த்தியாக காணிக்கை எந்தத் தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகைக்கும் செய்த பிரார்த்தனை பலிக்கும். ஒருவர் அதிகமான காணிக்கை செலுத்தினால் அது சேவையாக மாறிவிடும். வியாதி உள்ள ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் சமாதியை தரிசனம் செய்துவிட்டு,

ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் போனார். காணிக்கை செலுத்த நினைத்தார். அவர் எந்தக் காணிக்கை - ரூ.5 அல்லது ரூ.10 - செலுத்தினாலும் வியாதி குணமாகும். அவர் செல்வர். காணிக்கை வேண்டித் திரும்பினார். அருகிலிருந்தவர் எதுவும் புரியாமல் பல ரூ.100 நோட்டுக்கட்டுகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். 8ஆம் நாள் வியாதி குணம் ஆயிற்று. அத்துடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் புதிய நிலைமை ஏற்பட்டது. கனவிலும் கருதாத ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய மாநிலத்தில் அவரை முதன் மந்திரியாக ஆக்க வேண்டுமென்று அநேகர் விரும்பினர். அவருக்குப் புரியவில்லை. அதுவும் நடந்தது. காணிக்கை செலுத்தும் நேரத்தில் பக்தியால் உந்தப்பட்டு பெருந்தொகைகளைச் செலுத்துபவர்களுக்குப் பெரிய விஷயங்கள் நடப்பதுண்டு.

மாதம்தோறும் காணிக்கை செலுத்துவதை மட்டும் நோன்பாக ஏற்றுக்கொள்ளும் அன்பர் அதன் மூலம் முழுப் பலன் பெற செய்யக் கூடியவை என்ன?

முதல் கருத்து, காணிக்கைக்கு ஜீவனுண்டு என்பதை அறிந்து நாம் செலுத்தும் காணிக்கைக்கு ஜீவன் ஏற்படும் வகையில் அதைச் செலுத்தி, அந்த ஜீவனுடன் நாம் நித்தியத் தொடர்பு கொள்ள வேண்டும். அதை நிறைவேற்ற காணிக்கை ஒரு கடமை என்று செய்யாமல், ஜீவனுள்ள குழந்தையை வளர்ப்பது போன்ற உணர்வுடன் அதில் ஈடுபடவேண்டும்.


காணிக்கை என்பது நம் உடல் உழைப்பின் பக்தியை அன்னைக்குச் செலுத்துகிறது என உணர்ந்து, நம் உழைப்பை அன்னையின் சேவையாக, பொதுவாகக் கருத வேண்டும்.


காணிக்கையின் அளவை நம் சந்தர்ப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். அளவு இரண்டாம்பட்சம். நிர்ணயித்தபின் அதைக் குறைக்கக்கூடாது.


மாதம் வருமானம் வந்தவுடன், முதல் செலவு காணிக்கையாக இருக்க வேண்டும்.


காணிக்கை அனுப்பும்பொழுது அது சம்பந்தமான வேலைகளை, M.O. அனுப்புவது, செக் (cheque) எழுதுவது, தபாலில் சேர்ப்பது போன்றவற்றை நாமே நேரில் செய்ய வேண்டும்.


மனம் காணிக்கையைப் பவித்ரமாகக் கருத வேண்டும். பணமாகக் கருதக்கூடாது.


காணிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால் சிறப்பு. நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்தால், காணிக்கை நேரத்தில் உரிய இடத்திற்குச் சென்று, மறு தபாலில் பிரசாதம் வரும். 


காணிக்கையின் பூரணத்தையும், பவித்திரத்தையும், பிரசாதம் வரும் வேகத்தில் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக M.O. அனுப்பும்பொழுது நாம் புதிய நோட்டுக்களைப் போஸ்டாபீஸில் கொடுத்தால், அவை நேரடியாக ஆசிரமத்திற்குச் செல்லாது என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் கொடுக்கும் மனப்பான்மையே முக்கியம். 


காணிக்கையாக அனுப்பும் பணம் நம் மாத வருமானத்திருந்து வந்த அதே பணமாக இருப்பது நல்லது. M.O. மூலமாகவும், செக் (cheque) மூலமாகவும் அதே ரூபாய் நோட்டு போகாது என்றாலும், நாம் செய்வது நம்மைப் பொருத்தவரை நமக்குகந்தவையாகச் செய்துவிடுவது நல்லது. 


நம் ஸ்தாபனத்தில் சம்பளம் பல தேதிகளில் கொடுக்கலாம். நம்மைப் பொருத்தவரை நம் கைக்குச் சம்பளம் வந்தவுடன் முதல் காரியமாகக் காணிக்கையை அனுப்பிவிட்டால் போதும். ரூ.2000 சம்பளம் வாங்கிய ஒருவர் 1978இல் ரூ.200 காணிக்கையாக அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வேலையை விட்டு பயிற்சிக்காக ரூ.1000 சம்பளத்தில் அமர்ந்தார். ஏனோ அவர் காணிக்கையைக் குறைக்கவில்லை. தொடர்ந்து ரூ.200 அனுப்பினார். 1 வருஷம் என நினைத்த பயிற்சி 3 வருஷமாயிற்று. பல நல்ல காரியங்கள் நடந்தன. பெரிய இக்கட்டுகள் ஏற்பட்டன. 
1978 முதல் 1988 வரை அவர் 5 இடங்கள் மாறினார். மூன்று வேறு தொழில்களில் இருந்தார். பயிற்சி ஓர் இடத்தில், சம்பள வேலை மற்றோர் இடத்தில், கூட்டாளியாக வேறோர் இடத்தில் என பல நிலைகளில் அவர் இருந்தபொழுது பணம் அருமையானதாக மாறிய நேரங்கள் பல உண்டு. காணிக்கையின் அளவை அவர் இந்த எல்லா நிலைகளிலும் குறைக்கவில்லை. இன்று 2 கோடி ரூபாய் நிறுவனத்தில் தலைவராகவும், முக்கிய பங்குதாரராகவும் விளங்குகிறார். அதுவே காணிக்கையின் மகத்துவம்.



                                ----------------------------------
        
நினைவே வழிபாடு - இடையறாத அன்னை நினைவு:

பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் சுமார் 30 ஆண்டு காலம் உடன் உறைந்து அவருக்குப் பணி செய்தவர் ஒரு சாதகர். ஒரு சமயம் பகவானை அவர் தமக்கு ஏதாவது சொல்லும்படிக் கேட்க, பகவான் "இரவும், பகலும், எப்பொழுதும், தவறாது, இடைவிடாது, பிழை இல்லாமல் இறைவன் நினைவு வேண்டும் என்று பிரார்த்தனை செய்'' என்றார். அதுவே இந்த முறை. பொதுவாகப் பார்க்கப் போனால் இது மிக எளிய முறை. எவரும் பின்பற்றலாம். அதன் முழுமையைக் கவனித்தால், இம்முறைக்குச் சிறப்புண்டு என்று தெரிகிறது.

எந்தச் செயலைச் செய்தாலும் - இறைவனை - அன்னையை நினைத்துச் செய்கிறோம். எந்தச் செயலைச் செய்யவில்லை என்றாலும், அன்னையை நினைவுகூர்கிறோம். எந்த எண்ணம் தோன்றினாலும் அன்னையை நினைத்தபின் எண்ணத்தைத் தொடர்கிறோம். எந்த உணர்ச்சி தோன்றினாலும் அன்னையை முதலில் நினைக்கிறோம். அதனால் இடையறாத நினைவு ஒரு தெய்வீகப் பூரணத்தைக் கொடுக்கிறது. ஆகவே அன்னை நம் வாழ்வில் பூரணமாகச் செயல்படமுடிகிறது. வாழ்வின் அஸ்திவாரங்கள் மாறுகின்றன. அவற்றின் தன்மை மாறுகிறது. தரம் மாறுகிறது. திறன் மாறுகின்றது. வழிபாட்டின் சிறப்பு மெல்ல, மெல்ல வாழ்வு முழுவதும் பரவி, அன்னையின் ஆதிக்கத்துள் நம்மைக் கொண்டு வந்துவிடுகிறது.

இடையறாத அன்னை நினைவு என்றால் என்ன ?:


  • வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.

  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.

  • உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னையைக் காணுதல் அவசியம்.

  • எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன் மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.

  • கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும் முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.

  • ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

  • எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.

  • ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

  • ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதை விட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

  • ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

  • யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.

  • ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்யிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

  • பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.

  • குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.

  • யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

  • கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
  • உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

  • எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

  • கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

  • யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.
                       ------------------------------------

சுத்தம்:



சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது. அதை நான் இங்கு எடுத்து விளக்கவில்லை. புறத் தூய்மையை மட்டுமே குறிப்பிடுகிறேன். அதற்குரிய சிறப்பை விளக்கவே இப்பகுதியில் முயல்கிறேன். (purity of atmosphere) வீட்டுச் சூழல் தூய்மை என்றும் ஒன்றுண்டு. அன்னையின் திருவுருவப்படம் அந்தத் தூய்மையை வளர்க்கும். தெய்வச்சிலை, படங்கள் அதை வளர்க்கும். குட்டிச்சாத்தானை வணங்கினால், சித்து விளையாடுபவர்களுடன் தொடர்புகொண்டால் அந்தத் தூய்மை கெட்டு, இருளின் சூழல் ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் மந்திரப் பிரயோகங்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள், படங்கள் வீட்டிருந்தால், அன்னையின் திருவருள் அங்கு செயல்படாது. அப்படியே செயல்பட்டாலும் மிகக்குறைந்த பலனையே தரும்.



வீட்டில் புறத் தூய்மை என்றால் என்ன? என்பது எளிமையான கேள்வியாகத் தோன்றுகிறது. அன்னையின் சக்தி (Mother's Force) (supramental Force) சத்தியஜீவிய சக்தியாகும். அது ஓர் இடத்தில் வர, வந்து நிரந்தரமாகத் தங்க, புறத் தூய்மை (physical cleanliness) அத்தியாவசியம். இது எவ்வளவு முக்கியமானது, கடினமானது என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ரூ.25 இலட்சம் செலாவணியுள்ள கம்பெனி முதலாளியின் மனைவி கல்லூரிப் பேராசிரியர். அவர்களுடைய வீட்டில் முக்கிய விருந்து நடந்த அன்று உள்ளே நுழைந்தவுடன் நமக்கு அறிமுகமானது "அழுக்கு வாடை''. வீட்டில் பல நாட்களாகச் சேர்ந்துள்ள தூசி, அழுக்கு,அழுக்குத் துணிக்குவியல், இவை எல்லாவற்றையும் மறைத்து வைத்தாலும் தாங்கள் இருப்பதை அறிவிக்க அவை வாடை மூலம் நம்மை வந்து அடைகின்றன.


கையை வைத்த இடங்கள் தூசியில்லாமல் இருப்பது என்பது எத்தனை வீடுகளில் இருக்க முடியும்? நம் வீட்டிற்கு அந்தத் தகுதி உண்டா? சுவரில் மாட்டியுள்ள படங்களைத் தொட்டுப் பார்த்தால், விரலால் கோடிட்டுப் பார்த்தால், நாம் எத்தனை நாளைக்கு ஒரு முறை அந்த படங்களைச் சுத்தம் செய்கிறோம் என்பது நினைவுக்கு வரும்.


"குடித்தனம் செய்யும் பெண்ணின் சுத்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அலமாரிக்கு அடியில் பார்த்தால் தெரியும்'' என்பார்கள். நாம் தினமும் குளிக்கின்றோம். சிலர் தலையில் தினமும் தண்ணீர் விட்டுக் கொள்வார்கள். தலைமுடி நீளமாக இருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்கள் தினமும் தலையை நனைப்பதில்லை. வங்காளத்தில் அந்தப் பழக்கம் உண்டு. தலையை தினமும் நீராட்டாவிட்டால் தலையில் அழுக்கு சேர்வது இயல்பு. வீட்டைப் பெருக்குகிறோம். ஆனால் வீட்டில் உள்ள மேஜை, நாற்காகளைத் தட்டுகிறோம். அவற்றில் உள்ள தூசி நாம் பயன்படுத்துவதால் அகற்றப்படுகிறது. தினமும் மேஜை, நாற்காலி, படம், அலமாரி, இவற்றை நாம் சுத்தம் செய்வதில்லை. அதிகக் குப்பை சேர்ந்தால் சுத்தம் செய்கிறோம். படங்களுக்குப் பின்புறம், சோபா சீட்டிற்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் ஒட்டடை சேரும். எண்ணெய் பொருள்கள் உபயோகிக்கப்படுவதால், பெஞ்சு, ஸ்டூல், முதயவற்றில் அழுக்கு படை படையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். சமையல் அறை ஆசாரமானவர்கள் வீடுகளில் சுத்தமாக இருக்கும். மற்ற வீடுகளில் சுத்தமாக இருக்காது. (store foom) சாமான்கள் அறை ஒரு வீட்டில் சுத்தமாக இருந்தால், அதை மிகச் சுத்தமான வீடாக நாம் கருதலாம். ஜன்னல், கதவு, மேஜைக்கு அடிப்புறம் முதல் ஆரம்பித்து ஸ்டோர் அறை வரை எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் அவசியத்தை நாம் உணர வேண்டும். உணர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினை. ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, மற்ற காரியங்களை நிறைவேற்றியபின், இந்த அளவு வீட்டில் தூய்மையை நிலைநிறுத்த முடியுமா என்பது கேள்வி. என்னுடைய பதிலுக்கு இரு பகுதிகள் உண்டு. 1. இந்த அளவு தூய்மையை நம் இன்றைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுவது இயலாத காரியம். 2. தூய்மையை நாம் அன்னையின் வழிபாடாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டால், நம் அத்தியாவசியமான வேலைகள் எதற்கும் குந்தகமின்றி நிறைவேறும். அத்துடன் நம் அத்தியாவசியமான வேலைகள் சிறப்புறும். என் இரு பதில்கள் முரணானவைபோல் தோன்றுகின்றன. முரண்பாட்டை நீக்கி, விளக்கம் கொடுக்கிறேன்.


பொதுவாக நாம் ஆபீஸ், குடும்ப வேலைகள் முடிந்தபிறகு, முக்கியமாக நேரத்தைச் செலவிடுவது எதில் என்று பார்த்தால், சினிமா, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது, விசேஷங்களுக்குச் சென்று அதிகபட்ச நேரத்தைச் செலவிடுவது, சாரமில்லாத பத்திரிகைகளைப் படிப்பது, அக்கம் பக்கத்துச் செய்திகளை அத்தியாவசியமாகச் சேர்ப்பது என்பன போன்ற செயல்களில் என்று தெரியும்.


மாறாக, பரீட்சைக்குப் படிக்கும்பொழுது, வீடு மாற்றும் பொழுது, திருமணம் ஏற்பாடு செய்யும்பொழுது, எப்படி அவற்றிற்கு முக்கிய முதலிடம் கொடுத்து, பின்னரே அன்றாட வேலைகளை இரண்டாம்பட்சமாகச் செய்கிறோமோ, அதுபோல், "வீட்டின் சுத்தம் அன்னை வழிபாடு'' எனக் கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வேலை செய்வதைப் போல் வேலை செய்து, சுத்தத்தை முழுத் திருப்தியுடன் பூர்த்தி செய்த பிறகு கவனித்தால், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, அத்தியாவசியமான கடமைகள் எதுவும் தடைபடவில்லை என்று தெரியும். சுத்தத்தைத் தலையாய காரியமாக மேற்கொண்டு நிலைநிறுத்தியபின் நேரமில்லை என்பது வம்பளப்பதற்கு, ஊர் சுற்றுவதற்கு, சினிமா பார்ப்பதற்குத்தானே அன்றி, அவசியமான கடமைகளுக்கு நேரமில்லாமல் இல்லை என்பது தெரியவரும். இந்த முறையின் ரகஸ்யமே அதுதான். வீணான காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்க முடிவு செய்தால்தான் சுத்தத்தைத் திருப்தியாக நிறைவேற்ற முடியும்.

அப்படிப்பட்ட சுத்தம் அன்னைக்குச் சிறந்த வழிபாடு. அந்த வழிபாடு ஒன்றே வாழ்க்கைச் சிறப்பைத் தேடித் தரும்.




                          --------------------------------


- தொடரும் ...

No comments:

Post a Comment

Followers