Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Wednesday, February 6, 2013

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 30


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

இன்றைய பகுதியில் சில முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் -2 என்ற நூலின் தொடர்ச்சி. 
----------------------------------------------------------------------------------



முறை:

 பிறர் கர்மத்திற்குக் கருவியாகக் கூடாது. 1 வாரம் அல்லது 1 மாதம் அதைக் கடைப்பிடிக்கலாம்.

முறைக்கான விளக்கம்:


நாம் கர்மத்திலிருந்து விலகுகிறோம். பிறர் கர்மத்தை ஏற்கலாமா?

சம்பாதிக்க முடியாதவன், படிப்பை முடிக்காதவன், திருமணமாகாதவன் பெரிய குடும்பங்களிலும், சிறிய குடும்பங்களிலும் இருப்பதுண்டு.

அத்தைமகளை தன்விருப்பத்திற்கு எதிராகச் செய்து வைத்ததால், திருமணத்தன்றே அவளுடன் வாழப் போவதில்லை' என்றான். சொல்லியவன் கல்லூரி ஆசிரியன். கடைசிவரை வாழவில்லை.

நிலைமை பரிதாபமானது. பலரும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தனர்.

எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சர்க்காரில் டெபுடி டைரக்டராக இருந்தவன் பிரமோஷனில் சர்க்காருடன் கோபித்துக்கொண்டு ராஜினாமா செய்தான்.

ஓய்வுபெற வேண்டிய வயதிற்குமுன் இறந்துபோனான்.

இவனை மனைவியுடன் இணைக்க எவர் முயன்றாலும், இவனுடைய கர்மம் அவர்களுக்கு வரும். இவனுடைய கல்லூரி ஆசிரியர் முயன்றார்.

அவர் பையன் இவன்போல ஆனான். அவர் தம்பி அகால மரணமடைந்தான்.

இது நல்ல காரியமாயிற்றே செய்யக்கூடாதாஎன்பது கேள்வி.

அவனோ, அவன் மனைவியோ பிரச்சினையை அறிந்து, அதிருந்து மீள விரும்பி, நம்மை அணுகினால் செய்யலாம்; நாமே செய்யக்கூடாது.

பரம்பரை பட்டினியிருப்பவருக்குப் பஞ்சம் நீங்கி சுபிட்சம் வர முயன்றால் அவருடைய பஞ்சம் இரண்டு தலைமுறைக்கு, செய்தவருக்கு வருகிறது.

சொந்த சுபாவத்தால் கெட்ட பெயர் வாங்கியவர்க்கு அகில இந்தியப் புகழ் தேடிக் கொடுத்தால் அவர் கெட்ட பெயர் இடம் மாறுகிறது.

கூலிக்காரன் மகன் குடித்தனக்காரனாக முயல்வதை, இது இவன் கர்மம்எனப் புரியாது, நடத்திக்கொடுத்தால் நாட்டை ஆள வேண்டிய அம்சம் உள்ளவருக்கும் நல்லது நடக்கத் தவறுகிறது.

இதைச் செய்ய முயல்பவர் குறைவு.

அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் ஒரு நாளைக்கு 10 முறை வரும்.

அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

1 மாதம் கட்டுப்பாட்டிலிருந்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் வரும்.

அவர்களால் ஒரு நாள், ஏன் ஒரு முறையும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

சுபாவம் நம்மை மீறக்கூடியது.

நாம் சுபாவத்தை மீறுவது இலட்சியம்.

அது ஒரு வினாடியும் கட்டுப்படாதது. 1 மாதம் கட்டுப்பட்டால் பெரும் பலன் வரும்.

எந்த விஷயத்தில் சுபாவத்தைக் கட்டுப்படுத்தினாலும் இப்பலன் வரும்.

கர்மம் விஷயத்தில் சுபாவம் கட்டுப்படுவது மிகக் கடினம்.

கடினமான காரியத்தை அருள் சமாளிக்கும்.

அருளை அழைத்து கர்மத்தைக் கரைக்கலாம். நாம் அதில் தலையிடக் கூடாது.

                         -----------------


முறை:

 அழைப்பு பாக்கியம்என அறிதல். நினைவே ஒரு பாக்கியம். ஆன்மீக நன்றியறிதல்.

முறைக்கான விளக்கம்:


அன்னையை அறிதல் அதிர்ஷ்டம்.

அன்னையை அழைப்பது ஆன்மீக பாக்கியம். ஜீவனில் நன்றியில்லாமல் அன்னையை அழைக்க முடியாதுஎன்று இடைவிடாமல் அழைக்க முயன்றவர் அறிவார்.

சோவியத் யூனியனில் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு முட்டை கிடைக்கும் என்பதைக் கேட்டவர் இதென்ன பெரிசு' என்றார்.

அவர் வீட்டில் 8 பேருண்டு. அடிக்கடி முட்டை சாப்பிடுபவர். முட்டை சாப்பிடுவதும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு பெரியது.

8 பேர் தினமும் ஒரு முட்டை சாப்பிட மாதம் 240 முட்டை வாங்க வேண்டும். அவர் அந்த மாதம் வாங்கியது 10 முட்டை. தினமும் ஒருவருக்கு 1/24 பங்கு முட்டையுண்டு.

அடிக்கடி, மாதம் ஒரு முறை, அழைப்பில் உட்காருபவர் இல்லை, குறைவு. உட்கார்ந்தால் தூங்குபவர் பலர். ஒரு சிலர் குறட்டையும் விடுவர்.

தினமும் 1 மணி நேரம் அன்னையை அழைப்பவர் டெபுடி கலெக்டரானால், 6 மாத முடிவில் அவர் அகில இந்திய ஸ்தாபனத் தலைவராவார்.

நான் எழுதும் உதாரணமெல்லாம் வசதி பெறுபவை.

அறிவு வளர்வது, ஆதரவு பெருகுவது, மனம் அமைதியடைவது, பிரபலம் பெறுவது ஆகியவை வசதியுடன் ஒப்பிட முடியாத உயரத்திலுள்ளவை.

அன்னையை அறியாமல் அதன் சாரல் வந்த இனிய பழக்கமுள்ள ஆபீசர் சில ஆண்டுகளில் அகில இந்தியப் புகழ் பெற்றார், பல ஆண்டுகளில் உலகப்புகழ் பெற்றார். இவை அன்னையின் சூழலால் வந்தவைஎனவும் அவர் அறியமாட்டார்.

வாய்விட்டு அழைத்து, அதை மனத்தால் சொல்லி, அழைப்பை நெஞ்சுக்குக் கொண்டுபோய், அங்கிருந்து நெஞ்சுக்குப்பின்னால் கொண்டு போவதில் ஒவ்வொரு கட்டமும் எப்படி முக்கியம், சிரமம் எனத் தெரியும். ஒரு வாழ்நாளில் ஒரு முறையும் இவை சாதிக்கக் கூடியவையல்ல.

யோகத்தில் நாட்டமுள்ளவர் அறியக்கூடிய பாதையிது.

வாயால் அழைப்பதே பாக்கியம்.

அதையும் தொடர்ந்து செய்ய முடியாது.

ஒரு நாளில் சில மணி நேரம் அழைத்தால் பிறகு 1 மாதம் மறந்து போகும்.

பாக்கியத்தைப் பணமாக எண்ணாமல், பாக்கியமாகக் கருதும் மனமிருந்தால் ஒவ்வொரு முறையும் அழைக்கும்பொழுது அது பாக்கியம்' எனக் கூறும்.

பாக்கியம்என்று அறிவிப்பது அறிவு.

அமிர்தம்என உணர்வது உயிர்.

உணர்ந்து பேசமுடியாத உடல் புல்லரிக்கும்.

உடலின் புல்லரிப்பு அங்கு உயிரின் புன்னகை.

நினைவு, உணர்வு, உடல் உணர்வு என்பவை மனம்.

உயிர், உடல் அன்னையால் தீண்டப்பெறுவதாகும்.

--------------

முறை:

 எந்தக் காரியத்தை எவருக்கு செய்தால் வழிவிடும் என அறிதல்.

முறைக்கான விளக்கம்:

பெரியவருக்கு நமஸ்காரம் செய்யத் தடையை அகற்று.

தியானத்தில் ஒரு சில ஆங்கிலேயர் இருந்தனர். நாம் குருவுக்கு

சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால், அவர்களும் தாமாகவே முன்வந்து செய்தனர்.

நமஸ்காரம்' என் தலையில் கத்தி ஊடுருவுவதுபோலிருக்கிறது என்றார் அந்த மேல்நாட்டார். அவர்கட்குப் பழக்கமில்லை. ஒரு பெரிய ஆத்மாவுக்கு நமஸ்காரம் செய்யும் பக்குவமற்ற ஆத்மா அவர்.

தனக்கு வரவேண்டிய பெரிய பிரமோஷனில் பெருங்கேள்வி எழுந்து, 6 மாதமாகத் தடையாயிருப்பவர் 6 மாதம் முன் வீட்டில் உள்ள அண்ணன் மகனுக்கு வாங்கிய தீபாவளித் துணியை அவனைத் தண்டிக்க வேண்டி கொடுக்காமல் வைத்திருக்கிறார்என்று அறிவதில்லை.

அதைக் கொடுக்கும் நிர்ப்பந்தம் எழுந்தது. அன்றே பிரமோஷன் கிடைத்தது.

நம்சுபாவப்படி நாம் பல காரியங்களைச் செய்கிறோம், பல்வேறு காரியங்களைச் செய்ய மறுக்கிறோம். நாம் செய்த, செய்யாத ஒவ்வொரு காரியத்திற்கு நேரான தொடர்புடைய மற்றொரு காரியம் உண்டு என நாம் அறிவதில்லை.

கவனித்தால் பெரும்பாலும் விளங்கும்.

யோசனை செய்தால் மேலும் விளங்கும்.

சமர்ப்பணம் செய்து, யோசனையுடன் கவனித்தால் அனைத்தும் விளங்கும்.

ஒரு பெரிய சிக்கல் அண்ணனுக்குத் தம்பி தோற்க வேண்டும் என்ற நல்ல' எண்ணம். சிக்கல், பெரும் சிக்கலாகி, உடைந்து, மீண்டும் சிக்கல் ஆயிற்று. 11 வருஷம் கழித்து ஒரு நாள் தம்பி அண்ணனை நோக்கி, "சற்று உதவினால் நல்லது'' என்றார். 11 வருஷமாக அண்ணன் மனநிலையை அறிந்தவர் தற்சமயம் அவர் மனம் சற்று மாறுபட்டிருப்பதை அறிந்து கேட்டார். அண்ணன் இசைந்தார். மறுநாள் சிக்கல் அவிழ்ந்து,

எழுதி, கையெழுத்துப் போட்டு முடித்தனர்.

நம்வீட்டு நிலைமையை "எங்கள் குடும்பம்'' தாயார் அறிவதுபோல் கவனித்தால்,

எந்தப் பிரச்சினைக்குரிய முடிச்சும் தெரியும்.

எந்த வாய்ப்புக்குரிய வாயிலும் தெரியும்.
பக்தியிருந்தும் பழக்கத்தால் நமஸ்காரம் செய்ய உடல் தயங்கினால், தயக்கம் விலகி நமஸ்காரம் செய்தால், தடை விலகும், வாய்ப்பு பலிக்கும்.

கவனிப்பது முக்கியம்.
தொடர்பை அறிவது அதைவிட முக்கியம்.
இல்லாத தொடர்பைக் கற்பனை செய்பவர் பலனைக் கண்டு நிலையை அறிய வேண்டும்.

பகுத்தறிவு பேசுபவர் இதுபோல் கவனித்தால் அவர்கள் பகுத்தறிவுக்கும்' உலகில் தேவைப்பட்ட அறிவுக்கும் உள்ள தூரத்தைக் காண்பர்.

              --------------------------------------

முறை:

 உனக்குப் பொறுக்காதவற்றை (sensitive) அறிவதுபோல் வாழ்வை அறிய வேண்டும்.

முறைக்கான விளக்கம்:


நமக்கு வரவேண்டிய பிரமோஷன் அடுத்தவருக்குப் போய்விட்டது; பெரிய வரன் வந்தது எனக்கு, முடிந்தது எதிர்வீட்டுப் பெண்ணுக்கு; பந்தியில் மரியாதையில்லாமல் நடத்துவது; வயதில் சிறியவர் வயதிற்குரிய மரியாதை தாராதது; தங்கை என்னிடமிருப்பதைவிட அண்ணனிடம் அதிக நம்பிக்கை வைப்பது; நமக்குக் கீழே வேலை செய்தவன் கீழே நாம் வேலை செய்ய வேண்டிய நிலை பொறுக்க முடியாதவை. பல உதவிகள் நம்மிடம் பெற்றவன் ஓர் உதவி செய்ய மறுப்பது, நமக்கு செய்ய வேண்டிய உதவியைப் பிறருக்குச் செய்வது பொறுக்காதவை. மரியாதை, உரிமை போகும்பொழுது மனம் புழுங்கும். நாம் பாதிக்கப்படுவதுபோல் பிறர் பாதிக்கப்படுவதை நாம் பொருட்படுத்துவதில்லை.

பிறரைக் கடந்த நிலையில் வாழ்வுள்ளது.

நாம் பொறுக்காததுபோல் வாழ்வு பொறுக்காது.

நமக்கு ஜீவன் உள்ளதுபோல் வாழ்வுக்கும் ஜீவன் உண்டு.

அதை அறிவது பெரிய விஷயம்.

நமக்கு உரிமையுள்ளவரை வாழ்வு பொறுக்கும். நம் உரிமையின் எல்லையைக் கடந்து பேசத் தோன்றுவது அதிகப்பிரசங்கித்தனம். அப்படி செய்தால் வாழ்வு எதிரான பலன் தரும். DMKயைப் பற்றி இராஜாஜியை அவர் முதலமைச்சராக இருந்தபொழுது அபிப்பிராயம் கேட்டார்கள். அவர் அரசியல் தலைவர். அது அரசியல் அபிப்பிராயம். அரசியல் அபிப்பிராயத்தைக் கடந்து religious, spiritual opinion மதாச்சாரியர்கள் போல இராஜாஜி பேசினார். 10 ஆண்டுக்குள் அவர் DMK மேடையிலிருந்து DMKவை ஆதரித்துப் பேசும் நிலை வந்தது. ஒருவர் நிலம் வாங்க முயன்றார். நண்பர் தாம் விலை பேச முன்வந்தார். முடியும் பொழுது தனக்கு அதில் பாதி வேண்டும் எனக் கேட்டார். பிறர் வாங்கும் சொத்தில் பங்கு எவரும் கேட்கமாட்டார்கள். வாழ்வு அதை அனுமதிக்காது. ஓராண்டுக்குள் இவர் மனையை சொற்ப விலைக்கு சர்க்கார் எடுத்துக்கொண்டது.

பிறர் புண்படுவது எளிய செயல்.
வாழ்வு புண்படுவது பெரிய செயல்.
மனிதன் நடத்தைத் தவறாக இருப்பது, நாணயம் தவறுவதுண்டு. அதை வீட்டிற்குள்ளே செய்தால் குற்றம். நடத்தை நாணயம் தவறினால் தவறுபவன் தண்டனை பெறுவான். நெருக்கமான இடத்தில் அதைச் செய்தால் வாழ்வு புண்படும். குடும்பம், நட்பு என்பவை வாழ்வு ஏற்படுத்தியவை.

தவறு வேறு.
வாழ்வை மீறித் தவறுவது வேறு.
ஒருவனை அடித்தால், அது அடிதடி சண்டை; போலீஸ்காரனை அடித்தால் அது சர்க்காருக்கு எதிரான செயல். கோர்ட்டில் எதிரியைத் திட்டுவது திட்டு; ஜட்ஜைத் திட்டினால் (contempt of court) ஜெயிலுக்குப் போக வேண்டும்.

வாழ்வின் நயங்களை அறிந்து, அவை திருப்திப்படும்வகையில் நடக்க வேண்டும். அவற்றைச் சீண்டக்கூடாது.


           ----------------------------------

முறை:

 அழைப்பு ஆழத்தில் ஆனந்த உணர்வு கொடுப்பதைக் கவனி.

முறைக்கான விளக்கம்:
(அன்னையை அழைப்பது)
அழைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும்.


மேலும் அழைப்பு வாய்ப்பை உற்பத்தி செய்யும்.

இவையிரண்டும் வாழ்வுக்குரியவை.

ஆத்மாவுக்குரிய மௌனத்தையும், காட்சி, நேரடி ஞானம், ஞானத்தையும் அடுத்த அடுத்த கட்டங்களில் அழைப்பு தரும்.

அதற்கும் அடுத்தது சுமுக உணர்வு.

சுமுக உணர்வு ஆனந்தம் தருவது சத்தியஜீவியம்.

"என் சந்தோஷம் இரு மடங்காகி ஒரு வாரம் இருந்தது'' என ஒரு அன்பர் எழுதினார். இது யோக சித்தி. Mother's joy welling up.

அன்னையின் ஆனந்தம் பொங்குவது.

ஒரு நிமிஷம் இது கிடைப்பது அனுபவம்.

நிலையாகக் கிடைப்பது சித்தி.

இந்த ஆனந்தத்தில் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. ஆனந்தத்தில் தோன்றி, ஆனந்தத்தில் வாழ்ந்து, ஆனந்தத்தை அடைவது சிருஷ்டி.

சமர்ப்பணம் இவ்வானந்தத்தால் சரணாகதியாகும்.

அன்றாட எளிய நிகழ்ச்சிகளில் சமர்ப்பணம் இந்த ஆனந்தத்தைத் தருமானால், ஒரு முறையும் தருமானால், அவர் அன்னை விரும்பும் அன்பர். அவருக்குப் பிரச்சினைகள் பிரச்சினையில்லை.

இந்த ஆனந்தமும் மனம், உணர்வு, உடல், ஆத்மா என்ற 4 நிலைகளுள் மேலெழுந்தவாரியாகவும், ஆழ்ந்தும் உண்டு (consciousness and substance).

மனம்பெறும் ஆனந்தம் பரந்தமனம் தரும்.

உணர்வுபெறும் ஆனந்தம் உறவை இனிக்கச் செய்யும்.

உடல்பெறும் ஆனந்தம் நன்றியால் பூரித்து, உடல் புளகாங்கிதம் அடைதல்.

பரந்தமனம் நம் விஷயத்திலும், நமக்கு வேண்டியவர் விஷயத்திலும் அடைவது மேல்நிலை; பிறர் விஷயத்தில் எழுவது ஆழ்ந்த நிலை.

வேண்டியவர் உறவு இனிப்பது சிறியது. எவர் உறவும் இனிப்பது பெரியது.

உடல் பூரிப்பது ஒரு நிலை. புல்லரிப்பு ஆழ்ந்த நிலை.

நோக்கம் இந்த ஆனந்தம் பெறுவதானால் அன்பன் சாதகனாவான்.

ஆனந்தம் அறிவுக்கு அழகாகத் தெரியும்.

ஆனந்தம் ஆத்மாவுக்கு அன்பாகத் தெரியும்.

ஆனந்தம் உணர்வுக்கு சந்தோஷமாகும்.

அருள் உள்ளே வந்தால் அன்பாக வெளிப்படுகிறது.

அருள் உள்ளே ஆனந்தமாக ஆத்மாவில் எழுந்து அன்பாகிறது.

அழைப்பு வாய், மனம், நெஞ்சம், ஜீவன்எனப் பல நிலைகளிலிருந்து எழும்.

ஒவ்வொரு நிலைக்குரிய ஆனந்தம் ஒரு வகை.

இதைக் கவனிப்பது ஆத்ம விழிப்பு.

                             ----------------

முறை:

எவரையும் அவருக்குத் தாங்க முடியாத இடத்தில் (Sensitive point) தொடாதே.

முறைக்கான விளக்கம்:


சில ஊர்களுக்குக் கெட்ட பெயருண்டு.

சில ஜாதிக்கும் அது சில ஊரில் உண்டு.

ஓர் ஊரில் புகழுடைய ஜாதிக்கு வேறு ஊரில் நல்ல பெயரிருக்காது.

(Sensitive) சூடான சொரணையுடையவருக்கு இது போன்ற விஷயத்தில் positive பாஸிட்டிவாகக் கூறினாலும் கோபம் வரும்.

வக்கீலுக்கு எந்த ஊரிலும் மரியாதை.

மத்தியஸ்தத்தில் வக்கீல் பேசுவதை ஏற்க முடியாதவர் வக்கீல்போலப் பேசுகிறீர்கள் என்றால் வந்த விஷயமே கெட்டுவிடும்.

குடும்பம், ஊர், தொழில், ஜாதி, வயது, படிப்பு, கட்சி, இவற்றைப் பற்றி பேசுதல் மனம் புண்படும். அவற்றை அடியோடு விலக்குதல் அவசியம்.

சிலருக்கு இப்படிப் பேசுவதே பழக்கமாக இருக்கும்.

"கொட்டினால்தான் தேள்'' என்பது அவர் சட்டம்.

அவர்கட்குரிய முறை இது.

இப்படிப் பேச சந்தர்ப்பம் வந்தால் அவர்களால் பேசாமலிருக்க முடியாது. "நீ டிரைவர்தானே?'', "உனக்குப் பேச வயதில்லை'', "இது உங்கள் ஊர் பாஷை'', "படிக்காதவருக்குப் பேச உரிமையில்லை'', ,  என்ற சொற்களைச் சொன்னால் வம்பு வரும்.

அந்த சந்தர்ப்பம் வரும்பொழுது பேசத் துடிக்கும்.

சில ஊர்களின் பெயர் சொன்னாலே சிரிப்பார்கள்.

அந்த ஊர்க்காரரிடம் அதைத் தொட்டுப் பேசக்கூடாது.

இவ்விஷயத்தில் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் உள்ளே போராட்டம் பெரியதாக இருக்கும்.

அமெரிக்கர் நாகரீகமற்றவர், ஹாலண்டு நாட்டினர், ஸ்காட்லண்ட் நாட்டினர் கருமிகள் எனப் பெயர் பெற்றவர். நாம் வெளிநாடு போனால் நம்மை அந்த நாளில் மகாராஜா, பாம்பாட்டி என நினைப்பார்கள்.

இந்தியாவில் ராஜாக்கள் அதிகம்.

இங்கு தெருவில் பாம்பாட்டியைக் காணலாம்என அறிவார்கள்.

நம்மை "நீங்கள் ராஜாவா, பாம்பாட்டியா?''எனக் கேட்டால் நம்மனம் என்ன பாடுபடும்.

இதுபோன்ற discipline கட்டுப்பாட்டை 1 மாதம் பயின்றாலும் பலனுண்டு; 1 வாரமும் போதும்.

இந்தக் குணமுள்ளவர்க்கே இது பொருந்தும்.

அனைவர்க்கும் பொதுவாகப் பொருந்தும்.

குறிப்பாகப் பொருந்தாது.


                --------------------------------

முறை:

  சிறு தவறும், குறையும் ஏற்படாவண்ணம் 3 நாள் அல்லது குறைந்தபட்சம் 24 மணி நேரம் செயல்படுதல்.

முறைக்கான விளக்கம்:
தவறின்றிச் செயல்பட மனிதன் தெய்வமாக இருக்க வேண்டும்.


கடிதம் எழுதி மடித்துக் கவரில் போட்டபின் எடுத்துப் பார்த்தால் நாம் செய்த வேலை நமக்கே சிரிப்பு வரும்; பேப்பர் கோணலாக இருக்கும். ஜவுளிக்கடையில் 1 புடவை வாங்க பெண்கள் பல புடவைகளைப் பரிசீலனை செய்வர். கடையில் அப்புடவையை மீண்டும் மடித்து வைக்கும் நயம், பொறுமை பெரியது. 1 நாள் முழுவதும் நம் செயல்களை நாமே கவனித்தால் எப்படி அவற்றைச் சரியாகச் செய்வது எனப் புரியும். முதல் எப்படி ஒவ்வொரு சிறு காரியத்தையும் (perfectஆக) சிறப்பாகச் செய்வது என விவரமாக முடிவுசெய்யவேண்டும். அம்முடிவு மனத்தில் மகிழ்ச்சியாக மலரும்வரை பொறுமையுடன் பூரிக்க வேண்டும்.

3 நாள் அதைப் பின்பற்ற ஆரம்பித்தால் தவறுஎன வரக்கூடாது. வந்தால் அதிலிருந்து மீண்டும் 3 நாள் தொடர வேண்டும்.

இப்பயிற்சியை மேற்கொண்டபின் நம்மால் எந்த ஒரு சிறு காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது, இதுவரை செய்யவில்லைஎனப் புரியும்.

கதவைச் சாத்துவது, காரை ஸ்டார்ட் செய்வது போன்றவை சிறு வேலைகள். சத்தம் போடாமல், கதவு பொருந்தும்படி சாத்த இயலாது; பெருமுயற்சி வேண்டும். கார் ஆடாமல் (jerk) ஸ்டார்ட் செய்ய பாதி பேரால் முடியாது. அவர்களாலும் ஜெர்க் இல்லாமல் நிறுத்த முடியாது. மேஜை மேல் தட்டு, டம்ளர் சத்தமில்லாமல் வைக்க பயிற்சி வேண்டும். தினமும் பரிமாறுபவர் கரண்டியில் சூடாக சாம்பார் எடுத்துப் பரிமாறுகிறார். ஒரு நாளைக்கு அந்த வேலையை நாம் செய்தால் சாம்பார் சிதறும், கை பிடிபடாது; பயிற்சி தேவை. நெடுநாளைய பயிற்சியின்பின் இவற்றைப் பாதிப் பேரே ஒழுங்காகச் செய்வார்கள். சாம்பாரை அழகாகப் பரிமாறுபவர் கவனம் முழுவதும் பரிமாறுவதிலிருக்கும். அவரால் அடுத்த ஒரு காரியத்தை அதேபோல் செய்ய முடியாது.

நாள் முழுவதும் நாம் 100க்கு மேற்பட்ட காரியங்களைச் செய்கிறோம்.
ஒவ்வொன்றையும் சரியாகச் செய்ய வேண்டும்.

சரியாகச் செய்ய முடிந்தால் படபடப்பு வரும்.Relaxed சல்லிசாக இருக்க முடியாது. இயல்பாக, படபடப்பின்றி, அழகாக அனைத்துக் காரியங்களையும் முகமலர்ந்து செய்வது தெய்வஅம்சம்.
அதை முயன்று, கவனித்து, பொறுமையுடன் பெற்று 3 நாள் பயிற்சியாக மேற்கொள்வது நாம் நம் நிலையை அடிமட்டத்தினின்று உச்சிக்கு உயர்த்துவதாகும்.

இந்த நாளில் பேனாவுக்கு இங்க் போடவேண்டாம். பென்சில் சீவ வேண்டாம். அவை ஒருவர் நிதானத்தையும், திறமையையும் அளந்து காட்டும் செயல்கள்.

                     --------------------------------


.............................தொடரும்.

Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Sri. Karmayogi Avarkal - Part 29


Thanks,
AuroMere Meditation Center,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்





         

No comments:

Post a Comment

Followers