Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, January 3, 2013

நேரான முறையான வாழ்க்கை அன்னை அன்பர்கட்குச் சாத்தியமாவது எப்படி?




நேரான முறையான வாழ்க்கை அன்னை அன்பர்கட்குச் சாத்தியமாவது எப்படி?

நேரான முறையான வாழ்க்கை பெரும்பாலோர்க்குச் சாத்தியமில்லை என்பது உண்மை. எவருக்கும் சாத்தியமில்லை என்றும் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், நேர்மை, முறை என்பவை முடிவில் எட்ட வேண்டிய இலட்சியங்களாகும். அன்றாட வாழ்வுக்கு உரியவையல்ல. ஒளிக்கு நிழல் உண்டு. நிழல் இல்லாத ஒளியைச் சூரியனே உற்பத்தி செய்ய முடியவில்லை எனும்பொழுது, மனிதனுக்கும், மனித வாழ்வுக்கும் அவை சாத்தியமில்லை என்று கூறலாம். அன்னை தம் வாழ்வை sunlit path, everlasting day ஒளிமயமான பாதை எனவும் இரவற்ற பகல் எனவும் கூறுகிறார். அதனால் அன்பர்கள் முயன்றால் அவ்வொளியின் சாயல் அவர்கட்கும் கிடைக்கக்கூடும். முயற்சி பெரியது. பெரிய முயற்சியுள்ளவர்க்கு முடிவில் பெரும் பலனாக நேரான, முறையான வாழ்க்கை அமையமுடியும்.

நடைமுறையில் எல்லா பக்தர்களுக்கும் இது சாத்தியம் என்ற நம்பிக்கை எழும்படி அநேக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முழுமையான வாழ்வும் முறையாக இருப்பதும் அநேக நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் இடையே தூரமுண்டு. அதை முயற்சியால் நிரப்ப வேண்டும்.

ஏன் முறையான வாழ்வு பொதுவாக சாத்தியமில்லை? என்ற கேள்விக்குப் பலதரப்பட்ட விடைகள் உண்டு.

  1. வாழ்வு உயர்வு, தாழ்வால் அமைவதால் உயர்ந்தவனுக்குத் தாழ்ந்தவன் அடங்க வேண்டிய அவசியம் உண்டு.
  2. தனிமனிதனுடைய இலட்சியம் என்றும் குடும்ப லட்சியத்தைவிட, ஊர் இலட்சியத்தைவிட, உலக இலட்சியத்தைவிட உயர்வாக அமைவதால் முரண்பாடு எழுகிறது.
  3. வாழ்வின் அடிப்படை மெய்யில்லை, பொய்.முறையாக முடிக்க வேண்டும் என்பது குறிக்கோள் இல்லை. எப்படியாவது முடிக்க வேண்டும் என்பது நினைவு.
  4. உலகம் உள்ளுறை விஷயத்தை (inner content) கருதாது, தோற்றத்தையே முக்கியமாகக் கருதுவதால், பிணக்கு அவசியம் ஏற்படுகிறது.
  5. நேரான, முறையான வாழ்க்கை அதிகச் சிரமம் என்பதால் அதை அனைவரும் விலக்க முன் வருகிறார்கள்.
  6. நேரான, முறையான வாழ்வின் இலட்சியங்களை வாழ்வின் அடிப்படையில் ஏற்படுத்தவில்லை என்பதால், அவற்றை பூரணமாகப் பின்பற்ற முடியாது. அவை இலட்சியங் களாகவேயுள்ளன, நடைமுறை யதார்த்தங்களாக இல்லை.
  7. நாட்டின் கல்வித்திட்டம் இலட்சியத்தை முதன்மையாகக் கருதவில்லை.
  8. எந்தக் குடும்பமும் எந்த இலட்சியத்திற்காகவும் குழந்தைகளைத் தயார் செய்யவில்லை.
  9. நாட்டிலுள்ள மதங்கள் (rituals) சம்பிரதாயங்களைக் கற்றுக் கொடுத்தன. ஆன்மீகத்தைப் போற்றவில்லை.
  10. 200 ஆண்டுகளாக நாடு அடிமையாக இருந்தது.
  11. உலகில் வறுமைமிகுந்த நாடு இந்தியா.
  12. இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டிய பெண்கள் நம் கலாச்சாரத்தில் அடிமைகளாக இருக்கின்றனர்.
  13. நகரத்தில் சட்டம் ஆட்சி செய்தாலும், கிராமத்தில் "நாட்டாமை''யின் அநீதி இன்றும் செல்கிறது, மதிக்கப்படுகிறது. 

எளியவனை வலியவன் அதிகாரம் செய்வது, ஒழித்துக் கட்டுவேன் என மிரட்டுவதே வலியவனின் பெருமைக்கு அளவுகோல் என்று சமுதாய வாழ்வு அமைந்துள்ளபொழுது "பேயரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பதே வாழ்வு. நேர்மைக்கும், முறைமைக்கும் இடம் இங்கில்லை.


அன்னை அன்பர்கள் நிலை அடியோடு மாறியது.அதற்கு இணையேயில்லை. ஐரோப்பியர் ஒருவர். சமூக அநீதியை அனுபவித்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாழ்க்கை மீதும், உலகத்தின் மீதும் வெறுப்பேற்பட்டு ஹிப்பியான சமயம் "வேதாந்தம்'' அவர் காதில் வீழ்ந்தது.அது புதியதாக அமைந்தது. ஆன்ம விழிப்புக்கு வழி ஏற்படும் போலிருந்தது. அச்சமயம் Adventure of Consciousness என்ற புத்தகம் அவருக்குக் கிடைத்தது. "ஒரு புத்தகம் எழுதினால், அது முறையாக அமைந்தால், உலகம் அப்புத்தகம் மூலம் ஸ்ரீ அரவிந்தரை அறியும், ஏற்கும்'' என அன்னை அளவு கடந்து பிரியப்பட்டு சுமார் 10, 15 வருஷங்கள் செய்த முயற்சியால் சத்பிரேம் என்றவர் எழுதிய நூல் அது. இன்று ஆசிரமம், ஆரோவில் வந்த வெளிநாட்டாரெல்லாம் அப்புத்தகத்தாலேயே வந்தனர். இப்புத்தகம் இவருக்கு ஆன்ம விழிப்பைக் கொடுத்ததுடன், ஆசிரமம் வரும் ஆர்வத்தையும் அளித்தது. அவர் வந்து 1972இல் தரிசனம் பெற்றார். அதன்பின் அவர் மனம் உத்தியோகத்திலில்லை. மீண்டும் ஊருக்குப்போய் திரும்ப ஆசிரமம் வந்தார். 7,8 வருஷம் புதுவையிலும், Mother Estates இலும் வேலை செய்தார். Visa  இல்லை என திரும்பிப் போனார். வேலையில் நாட்டமில்லாமல் 3 ஆண்டிருந்தார். பிறகு ஒரு பெரிய கம்பனியில் கடைசி வேலையில் சேர்ந்தார். சேர்ந்த இடத்தில் தொந்தரவு.


இவருக்குப் பட்டம் இல்லை. அஞ்சல்வழிப் படிப்பு, மாலைநேர வகுப்புகளில் சேர்ந்து பட்டம் பெற முடிவு செய்தார். BBA வகுப்பில் மாலை நேர வகுப்புகளில் சேர்ந்தார். ஒரு கம்பனியில் அக்கௌண்டண்ட்டாக வேலை செய்பவர் இவருடன் படித்தார். நல்ல நண்பர். அவரிடம் accountancy கற்றுக்கொண்டார். அவருக்கு விஷமம் செய்யத் தோன்றியது. வரவை செலவில் எழுதும்படியும், செலவை வரவில் எழுதும்படியும் சொல்லிக் கொடுத்தார். நண்பர் என்பதால் சந்தேகம் எழவில்லை. பரீட்சைக்குப் போனார். பரீட்சை முடிந்து Viva voce நேர்முகப்பரீட்சை வந்தது. Examiner ஆசிரியர் accountancy யைப் பற்றி பக்தரிடம் கேள்வி கேட்டபொழுது, அவர் ஆயுளில் கேள்விப்படாதது போல் பக்தர் தலைகீழே பதில் சொன்னார். ஆசிரியர் திகைத்துவிட்டார். கேள்விகளை நிறுத்திவிட்டு பக்தர் பூர்வோத்திரத்தை விசாரித்தார். தாம் இந்தியா சென்றது, வேதாந்தம் பயின்றது, ஆசிரம வாழ்க்கை, புது வேலை, சொந்தத் தொழில் ஒன்று சமீபத்தில் ஆரம்பித்தது எல்லாம் சொன்னார். கேட்டவர் மகிழ்ந்தார். "நீங்கள் கணக்கில் சொல்லிய பதில் மன்னிக்க முடியாத தவறு. ஆனால் உங்கள் வாழ்வில் தொடர்ந்த அதிர்ஷ்டத்தைக் காண்கிறேன். நான் அதற்கு தடையாக இருக்க விரும்பவில்லை. உங்களுக்கு பாஸ் போடுகிறேன்'' என்றார். நண்பர் துரோகம் செய்தபின், அன்னை செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அடுத்து  M.B.A. படித்தார். வகுப்பில் 40 பேர். அவருள் அக்கௌண்டண்ட்கள் 3 பேர். துரோகம் செய்த நண்பரும் அதில் ஒருவர். பரீட்சை கடுமையானது. வழக்கமாக பாஸ் செய்வது குறைவு. அந்த ஆண்டு 3 பேர் மட்டும் பாஸ் செய்தனர். அவருள் பக்தர் ஒருவர்.  Accountancy இல் பெரும்பாலோர் பெயிலானார்கள். அவருள் 3 அக்கௌண்டண்ட்களும் பெயிலானார்கள். துரோகம் செய்த நண்பரும் பெயிலானார்.


துரோகத்தை மீறி நேர்மைக்கு அன்னை பரிசு தருகிறார்.


பிரபல பாடகி சங்கீதசபா காரியதரிசியை மணக்க விரும்பினார். அவருக்கும் பாடகி மேல் உயிர். ஜாதி பேதமில்லை. இருவரும் ஒரே ஜாதி. காரியதரிசியின் பெற்றோர் ஜாதி ஒன்றாக இருந்தாலும் அவள் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவள் என மறுத்தனர். வெகுநாள்வரை இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. மனத்தால் ஒன்றி வாழ்ந்தனர். மனத்தின் விருப்பம் இருவருக்கும் ஆழ்ந்து உயிரையும், உடலையும் ஆட்கொண்டது. குடும்பத்தடை வென்றது. நெடுநாள் கழித்து வேறு ஜாதியில் ஒருவர் அவளை விரும்பினார். உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராயினும் அவளுக்கு மனம் இடம் தரவில்லை. அவருடைய வற்புறுத்தலாலும், சந்தர்ப்பத்தாலும் அவரை மணக்கச் சம்மதித்தாள். திருமணம் ரிஜிஸ்டர் திருமணம். தனக்குச் சாட்சி போட சபா காரியதரிசியை அழைத்தாள். பிறகு அவரும் திருமணம் செய்துகொண்டார். உலகத்திற்கு அவர்கட்கு திருமணமாயிற்று. அதை அவர்கள் உள்ளமோ, உடலோ ஏற்கவில்லை போலும், அவளுக்குப் பிள்ளை இல்லை. அவருக்கும் சந்தானமில்லை. 90 வயது வாழ்ந்தார். நேரான, முறையான உணர்வுக்கு, சமூகம் இடம் கொடுத்தாலும், குடும்பம் இடம் தரவில்லை. நேர்மைக்கு வாழ்வில்லை.


SSLC வரும்வரை ஆங்கிலத்தில் பாஸ் செய்து அறியாத பையன் கடைசி ஆண்டு ஆங்கிலம் கற்கிறான். முதல் மார்க் வாங்கினான். அவனுக்கு முதல் மார்க் போட்ட, "ஆசிரியர்'' அவன் மார்க்கை திருத்திக் குறைத்து இரண்டாம் மார்க்காக்கினார். ஆசிரியர் என்பவர் குரு. இதுவே குருவின் ஆசீர்வாதம்! பையனுக்கு நியாயம் கிடைக்க வழியில்லை.


இன்று திரையுலகில் முன்னணியில் நிற்கும் டைரக்டர் அன்று AG's office இல் வேலை செய்தார். லீவு போட்டு சினிமா படம் எடுப்பதை தடுக்க அவருக்கு லீவு தர மறுத்தனர். துணிச்சலாக ராஜினாமா செய்தார். அவ்வளவுதான் ஆபீஸ் உருவில் சமூகம் கொடுத்த ஆதரவு.


IAS பாஸ் செய்து ஆசிரமத்தில் சேர்ந்தார். ஆசிரமப் பள்ளிக்குத் தலைவராக இருந்தார். 20 வருஷம் சர்க்கார் அவருக்கு லீவு கொடுத்தது. அன்னை சமாதியானபின் வேலைக்குப் போனார். 20 ஆண்டு வேலையிலிருந்திருந்தால் என்ன பிரமோஷன் கிடைத்திருக்குமோ அத்துடன் மத்திய சர்க்கார் வேலையில் செக்ரட்டரியாகச் சேர்ந்தார்.

சமூகவாழ்வில்,
  • வ.உ.சிக்குக் கப்பல் ஓட்ட அனுமதியில்லை.
  • நந்தனுக்கு நடராஜ தரிசனமில்லை.
  • பாரதியின் அற்புதப் படைப்புகளைப் பண்டிதர்கள் ஏற்கவில்லை.
  • ஐன்ஸ்டீன் Theory of relativityயை நோபல் கமிட்டி ஏற்கவில்லை.
  • அவருடைய வேறு ஒரு கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு அளித்தனர்.
  • ஆதிசங்கரர் சிதம்பரம் வந்தபொழுது அவரை விக்ரஹத்தின் அருகில் வர அனுமதிக்கவில்லை.


அன்னை வாழ்வில்,

  •  அது தலைகீழே நடப்பதைக் காணலாம்.
  • கேட்காமலேயே தரிசனநாளில் வெளியூர் பக்தரை அழைத்து ஸ்ரீ அரவிந்தர் அறையில் தியானம் செய்யச் சொன்னார் முக்கியஸ்தர்.
  • 30 ஆண்டுகளாக 5, 6 பாங்கில் பணம் பெற்ற பக்தரை எவரும் லஞ்சம் கேட்கவேயில்லை.
  • நாட்டு நிலைமையை ஒட்டி ஜட்ஜுக்குப் பணம் அனுப்பிய பக்தருக்கு அப்பணத்தை ஜட்ஜ் திருப்பிக் கொடுத்து "கேஸ் நியாயமானது'' எனத் தீர்ப்பளித்தார்.

நேர்மைக்கும், முறைக்கும் அன்னை பக்தர்கட்கு ஆதரவு முழுவதும் உண்டு.

-- திரு. கர்மயோகி அவர்கள் 
மலர்ந்த ஜீவியம் ஜனவரி 2001


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, எல்லாம் தரும் அன்னை, ஸ்ரீ அன்னை , ஸ்ரீ அரவிந்தர்  மலர்ந்த ஜீவியம் ஜனவரி 2001







         

No comments:

Post a Comment

Followers